சம்சாரா












மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்கள் குகையின் உள்ளேயே கடும் தவம் புரிந்து வரும் தாஷிவை அழைத்து செல்ல மடாலயத்தின் குருமார்கள் வருகின்றனர்.



பாறை மீது எழுதியுள்ள 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' என்ற வாக்கியத்தை படித்து யோசித்து கொண்டே தன் துறவற மடாலயத்திற்கு திரும்புகிறான் தாஷி.. ஐந்து வயது முதல் பெண் பார்வையும் வாசனையும் இல்லாத கடும் துறவறம்.



தாஷிவை லாமாக்க அவனது குருமார்கள் செய்யும் ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க
தாஷிவுக்கு கடுமையான தடுமாற்றம் மறுபுறம். மீண்டும் துறவறமா..?? என்ன சாதித்தோம் இந்த துறவறத்தில். குழப்பி போகிறான்.



அறுவடை காலத்தில் பயிர்களையும் விவசாயிகளையும் ஆசிர்வதிக்க போன இடத்தில் பேமாவை பார்க்கிறான். சந்திக்கிறான். மனம் இழக்கிறான். மீண்டும் திரும்பி வந்ததும் மடலாயத்தில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆண்மையையும் அடக்க முடியவில்லை. பேமைவை தேடி செல்ல முடிவும் எடுக்கிறான்.


பேமா ஏற்கனவே குடும்ப முறைப்பையன் ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டவள். துறவறத்தை துறந்து சாதாரண உடையில் பார்த்ததும் கிராமத்தினருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியும் கூடுகிறது.



பேமாவும் தாஷியை விரும்புகிறாள். புல் வெளியில் இயற்கையோடு இருவரும் கலக்க முறைப்பையன் பார்த்தும் விட விட்டும் கொடுக்கிறான். பேமா தாஷி திருமணம் இனிதே நடக்கிறது.



மண்வாசனையே அறியாதவனுக்கு திடிரென்று கிடைத்த இல்லறம். அதுவும் அடக்கி வைக்கப்பட்ட ஆண்மை.... கேட்க வேண்டுமா..? காமத்தில் கொக்கேகருக்கே கற்று கொடுக்கும் அளவிற்கு மூழ்கி திளைக்கிறான் தாஷி. ஒரு மகனும் பிறக்க அவனுக்கு கர்மா என்று பெயர் சூட்டுகிறார்கள் தம்பதியர்கள்.



குடும்பஸ்தன் ஆகி விட்டதால் பொருள் ஈட்டும் ஆசையும் வருகிறது. விவசாயத்திலும் நாட்டம் கொள்கிறான். தரகு முதலாளி வேண்டாம், நாமே சந்தையில் போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கிராமத்தினரிடமும் தன் மாமானாரிடம் வாதாடுகிறான். ஆனால் இரவோடு இரவாக பயிர்கள் தீ பிடித்து எறிய தரகன் தான் காரணமென சந்தேகித்து அவனோடு சண்டையிட நகருக்குள் செல்கிறான். தனியாய் வந்து மாட்டி கொண்டவனை தரகனின் ஆட்கள் புரட்டி அடிக்க மீண்டும் கிராமத்திற்கே வந்து சேருகிறான்.




மீச்சம் மீதி இருக்கும் தானியங்களையாவது விற்று நாலு காசு பார்க்கலாம் என மகனுடன் நகரத்துக்கு பயணிக்கிறாள் பேமா. கூலி வேலை செய்யும் கவர்ச்சி பெண்ணொருத்தியான சுஜாதாவின் மேல் வெகு நாட்களாக கண் வைத்து காத்திருக்கிறான் தாஷி.



வீட்டில் மனைவியும் இல்லை எவரும் இல்லை. அந்த நேரத்தில் சுஜாதாவும் அடிக்கடி வந்து செல்கிறாள். ஆசையும் மோகமும் பற்றி எரிய இதுவரை எவருமே செய்யாத புது வித கலவியில் இருவரும் ஈடுபடுகின்றனர்.



தாஷிவைக் காண பழைய மடாலயத்தோழன் வருகிறான். அவனது இல்லறம் பற்றியெல்லாம் விசாரிக்கிறான். மெளனத்துடன் திரும்பி செல்கிறான். மனைவி இருக்க வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டதை எண்ணி வருந்துகிறான். குற்ற உணர்வால் நிலை கொள்ளது தவிக்கிறான்.



இந்த வாழ்க்கையும் கசந்து விடவே துறவறமே நல்லறம் என்று எண்ணியவனாய் இரவோடு இரவாக துறவற உடையணிந்து மடாலயம் நோக்கி பயணிக்கிறான்.



அதே பாறையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேமா குறுக்கிடுகிறாள். சித்தார்த்தன் கதையில் யசோதாவை தெரியுமா..?? என்று ஆரம்பித்து அவள் பட்ட வேதனைகள், அவமானங்கள். இரவோடு இரவாக விட்டு சென்றபின் யாரறிவார்..??


ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள்.


பதில் பேச முடியாமல் உடைந்து போகிறான் தாஷி. பேமாவின் காலடியில் கண்ணீருடன் விழுகிறான். அவனையும் அவன் துறவறத்தையும் மதிக்காத பேமா குழந்தையை எண்ணிய படி வீட்டை நோக்கி செல்கிறாள்.



பாறையின் இன்னொரு புறத்தில் 'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!' என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த காட்சியுடன் நிறைவடைகிறது திரைப்படம்.



திபெத் / லடாக்கி மொழிகளிம் ல் வெளியான இத்திரைப்படம் பல உலக விழாக்களில் பங்கு பெற்றதுடன், உலகம் முழுவதும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளுடன் மெல்போர்ன் பட விழாவில் பரிசையும் தட்டி சென்றது. சுஜாதாவாக நடித்திருப்பது Neelesha BaVora



வசூலிலும் நூறு கோடிகளை வாரி குவித்துள்ளது.






இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசம், தூய்மையான நீரோடைகள், வெளிர் நீல வானம், என்று இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. மலைகளின் உச்சியில் மடாலயம். அங்கு பால்யம் மாறாமல் வாழ்க்கை அறியாமல் சுற்றி திர்யும் குழந்தை துறவிகள் என்று ஒவ்வொன்றையும் ஒரு தவம் போல் இயக்கியுள்ளார் பான் நளின்.



இயக்குநர் பான் நளின் இந்தியர். குஜாராத்தை சேர்ந்தவர். பரோடா பல்கலை கழகத்தில் பயின்றவர். திரைப்பட தாகத்தால் பல வித மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல்புகளை நேரில் காணவும் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்தவர். இருபது மேற்பட்ட குறும்படங்களை எடுத்துள்ள பான் நளினின் முதல் திரைப்படம் இது.



2006ல் உலக சுற்று விழிப்புணர்வு குறித்தான ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.


பல உலக நாடுகளின் திரைபட விழாக்களிலும் நடுவர் குழுவில் இடம் பெற்றதுடன், ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் அடுத்த வருடம் சுற்று சூழல் குறித்தான 30 நாடுகளிலிருந்து 30 இயக்குநர்களை ஆவண படம் எடுப்பதற்காக அழைத்துள்ளதில், அதில் அழைக்கப்பட்ட ஒரே இந்தியர் பான் நளின் ஒருவர் மட்டுமே என்பது கூடுதல் தகவல்.



நம் இந்தியர் ஒருவரின் இந்த உலக சினிமாவையும் பாருங்கள்.



உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.


சில கூடுதல் காட்சிகள் இங்கே





Labor Pains
















தியா புத்தக பதிப்பக கம்பெனியில் முதலாளியின் காரியதரிசியாக வேலை பார்த்து வருகிறாள். அவன் என்னவோ அவள் மீது இருக்கும் கோபத்தில் அவனது செல்ல நாய் குட்டியை குளிப்பாட்டும் வேலையை ஒரு நாள் கொடுக்கவே அவன் மீது கடுப்பாகி தனது அலுவலக தோழியிடம் முதலாளியை கண்டபடி திட்டி தீர்க்கிறாள்.



இதை பக்கத்து பாத்ரூமில் இருந்த படியே ஒட்டு கேட்ட முதலாளி அவளது சீட்டை கிழிக்க அதிர்ந்து போகிறாள் தியா.



தனது தங்கையை படிக்க வைக்கவும் தனது வேலையை பாதுகாக்கவும் தான் கர்ப்பமாக இருப்பதாக சமயோசிதமாக பொய் சொல்கிறாள் தியா. கர்பத்திற்கு காரணம் தனது சீன காதலன் என்று ஒருவனையும் கூறிவிடுகிறாள். அதனால் கர்பிணியாக இருக்கும் போது பெண்களை வேலையை விட்டு தூக்க கூடாது என்ற அமெரிக்காவின் அரசாங்க விதிப்படி வேலையும் தப்பிக்கிறது.



தான் கூறிய பொய்யை காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள் தனது பொய்யான கர்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே சற்றும் ஆபாசமில்லாத நகைச்சுவை மிகுந்த LABOR PAINS ஹாலிவுட் திரைப்படம்.
100% காமெடிக்கு நான் கிராண்டி. இந்த ஆண்டு தான் வெளிவந்துள்ளது



அமெரிக்க விதிப்படி வேலையை தக்க வைத்து கொண்ட தியா,
அலுவலக தோழியின் ஆலோசனைப் படி சிறு தலையணையை வயிற்றில் கட்டி கொண்டு தினமும் அலுவலகம் செல்லவும் ஆரம்பிக்கிறாள்.

அவள் மீது கடுப்பான முதலாளியும் தன் செல்ல நாய் குட்டியின் உடல் நிலை குறித்து கவலை பட்டு அதற்கு சிகிச்சையளிக்க வேண்டி, தனது பொறுப்புகளை தனது தம்பியான நிக்கிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர் செல்கிறான்.



நிக் வசீகர தோற்றம் கொண்ட வாலிபன். தொழிலில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற தீரா தாகம் கொண்டவன்.



கர்ப்பிணி பெண்களின் மன நிலையும் பேறு காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களையும் அவர்கள் படும் அவஸ்தைகளையும் குறித்த புத்தகம் ஒன்று வெளியிட்டால் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறான். இந்த நேரத்தில் கர்பிணியாக இருக்கும் தியாவே இதற்கு ஏற்ற ஆளாக நினைத்து அவளுக்கு பதவியுயர்வும் தனி அறையும் அளித்து அவளை இந்த Parenting Division என்று ஒன்று ஏற்படுத்தி அவளை அதற்கு எடிட்டராகவும் நியமிக்கிறான்.


இந்த கர்பிணி நாடகத்தால் அவளுக்கு கிடைத்த மரியாதையும் பதவியுயர்வும் தியாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அதை ரசிக்கவும் கொண்டாடவும் செய்கிறாள். எல்லா இடங்களிலும் அவளை தனி மரியாதையுடன் நடத்துவதையும் சலுகைகள் கிடைப்பதையும் நினைத்து நாடகத்தை தொடரவும் விரும்புகிறாள்.


புத்தக பதிப்பகம் நிமித்தமாக நிக்கும் தியாவும் நெருங்கி பழகுகின்றனர். அதுவே காதலாகிறது. ஆனால் தனது சகோதரியின் கர்ப்பிணி நாடகம் தியாவின் தங்கைக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பொய் சொல்லி தன்னை காப்பாற்ற வேண்டாமென்று கூறி அவளது பாதுகாப்பாய் வைத்திருந்த தலையணைகளையெல்லாம் கிழித்து போடுகிறாள்.



புத்தகம் வெளியாகி வசூலில் சக்கை போடு போடுகிறது. இது சம்மந்தமாக அன்று இரவு ஒரு மீட்டிங். நிக் கண்டிப்பாக வருமாறு தியாவை அழைக்க வயிற்றில் பலூனை கட்டி கொண்டு போக அங்கு ஏறபட்ட ஒரு சிறு சண்டையில் பலூன் வெடித்து தியா கர்ப்பம் இல்லை என்று தெரியவர தியா நொறுங்கி போகிறாள்.

பின்னர் நடந்த டிவி பேட்டியில் தனது அனைத்து தவறுகளுக்கும் தான் வருந்தவதாகவும் நிக்கிடம் மன்னிப்பும் கோருகிறாள் தியா.


தியாவை மன்னித்து ஏற்று கொண்டு அவளை திருமணமும் செய்து கொள்கிறான் நிக்.
இரண்டு வருடம் கழித்து நிஜமாகவே ஒரு நாள் தியா அலுவலகத்தில் பிரவச வலியில் துடிக்க அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஒடுகிறான் நிக். சுபம்.

தியாவாக நடித்திருப்பது 23 வயதான Lindsay Lohan. கொஞ்சும் இளமை துள்ளல், துறு துறு நடிப்பு என கலக்கியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி பல அமெரிக்க தொலைகாட்சிகளில் நடித்தவர் என்பதால் நடிப்பில் அவ்வளவு இயல்பு. நடிப்பு மட்டுமல்ல பாப் பாடகர், மாடலிங், பேஷன் டிசைனர் என்ற பல துறைகளிலும் தனிதிற்மை வாய்ந்தவர். படத்தில் இல்லாத Lindsay Lohan கொடுத்த ஒரு போஸ் இங்கே.



நிக்காக நடித்திருப்பவர் Luke Kirby. இவரும் தொலைகாட்சி நடிகரே. நடிப்பில் சில விருதுகளையும் பெற்றுள்ளார். இயக்கம் Lara Shapiro. கதையென்று சொல்ல முடியாத ஒரு ஒன் லைனரை வைத்து ஒரு அட்டகாச காமெடியை தந்திருக்கிறார். பாராட்டுகள்.




குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.





வழக்கப்படி உடனே பார்க்க டிரைலர் இங்கே





டிஸ்கி: தவிர்க்க முடியாத சில காரணங்களால் பல நாட்களாக இங்கு எழுத முடியாமல் போனது. அது பற்றி மின்னஞ்சல் மூலவும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் அளவற்ற அன்பிற்கும் நன்றிகள் பல. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

The Keys To The House








தந்தை எவ்வழி..


நடந்த கோணல் பாதை மீதினில்
புதிதாய் சின்னஞ்சிறு பாதங்கள்..
சற்றே நடுங்கி
நிதானித்து
பத்திரமாய் எழுகின்றன கால்கள்
தொடரப்போகும் அடிகளுக்கு…


என்ற விழியனின் கவிதை வரிகளுக்கு ஏற்ற தந்தையில்லை கியானி.


பாலோ பிறந்த அன்றே மனைவி இறக்க காரணமானது இந்த குழந்தைதான் என்று எண்ணி குழந்தையை விட்டு விட்டு ஓடிப்போனவன்.


பதினைந்து வருடங்களாக தனது மகனை போல வளர்ந்து வருபவர்கள் பாலோவின் மாமனும் அவனது மனைவியும். ஆனால் அவனுக்கு ஆறு வயதுக்குள்ள குழந்தையின் மன வளர்ச்சியே உள்ளதென்றும் இப்போது பெற்றோரின் அரவணைப்பு மிக மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் அவனது மன நிலையில் மாற்றம் வரும என்று சொன்னதால் கியானியை அழைத்து அவனிடம் பாலோவை ஒப்படைகிறான் மாமன்.


மன்னிக்கவே முடியாத தவறை செய்து விட்டதாக வருந்தும் கியானி மன வளர்ச்சி குன்றிய தனது மகனை உள்ளத்தால் நெருங்குகிறானா ? பாலோ கியானியை தந்தையாக ஏற்று கொள்கிறானா என்பதே The Keys to the House இத்தாலிய திரைப்படம்.


துளியும் நஞ்சு கலக்காத பிஞ்சு மனதிற்குள்ளும் கடலளவு குற்ற உணர்வு கொண்ட தந்தை மனதிற்குள்ளும் நடக்கும் பாச போராட்டம்.


பெர்லினில் புகழ்பெற்று விளங்கும் MRC குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி நடை பயிற்ச்சியும் மன நல பயிற்ச்சியும் பெறுவதற்காக வருகின்றனர் பாலோவும் கியானியும்.


மருத்துவமனையில் இருக்கும் மற்ற குழந்தைகளை கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைகிறான் கியானி. அந்த மருத்துவமனையில் தனது மகனை விட கொடுமையான நோயால் பாதிக்கப்ட்டிருக்கும் இருபது வயது பெண்ணையும் அவளது தாய் நிக்கோலாவையும் பார்த்து நிலை கொள்ளாமல் தவிக்கிறான்.


அவனது தந்தை கியானிதான் என்று மாமா சொன்னதாக கூறும் பாலோ தந்தை கியானியை ஆரம்பம் முதலே முற்றாக வெறுக்கிறான். என்னதான் நீ எனக்கு செய்தாலும் என் மாமா ஆல்பிரட்டோ போல் வருமா என்கிறான்? ஆனாலும் தன் குற்ற உணர்ச்சியால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு பாலோவை நெருங்க அனைத்து வழியிலும் முயற்ச்சிகிறான் கியானி.


தினந்தோறும் அவனை நடை பயில பக்கத்தில் உள்ள பூங்காவிற்கும் அழைத்து செல்கிறான். அவன் கேட்ட உணவு பொருட்களையெல்லாம் வாங்கி கொடுக்கிறான். ஆனாலும் பாலோவோ கியானியை வெறுத்து கொண்டே இருகிறான். இவர்கள் இருவரின் அனைத்து செய்கைகளையும் அமைதியாக கவனித்து கொண்டிருக்கிறாள் நிக்கோலா.


ஒரு சமயம் பாலோ செய்கைகளை பொறுத்து கொள்ள முடியாது கோபம் கொள்கிறான் கியானி. என்ன செயவதென்றும் புரியாமல் தவிக்கவே நிக்கோலாவிடம் ஆலோசனை கேட்கிறான். அதற்கு நிக்கோலா இளம் வயதில் அவனுக்கு கிடைக்காத பெற்றோரின் அன்பும் அரவணைப்புமே இதற்கு காரணம். அதனால் "Prepare yourself for suffering if you intend to be close to him." என்று அறிவுரை சொல்கிறாள். அதையே பின் பற்றவும் உறுதி கொள்கிறான்.

ஒரு நாள் கைப்பந்தாட்ட மைதானத்தில் விளையாட்டை பாலோ ரசித்து கொண்டிருக்க சற்று அசட்டையாக வெளியே உலவுகிறான் கியானி. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் பாலோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. துடித்து போகிறான் கியானி. பாலோ தன்னந்தனியே இரயில் ஏறி எங்கோ சென்று விடுகிறான். பிறகு காவலர் அவனை கண்டுபிடித்து கியானியிடம் ஒப்படைகின்றனர். மன நிலை சரியில்லாத மகனை இப்படிதான் கவனிப்பதா என்றும் கேள்வி எழுப்பவே பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான் கியானி.


பாலோவை இன்னும் கூடுதல் கவனிப்புடன் பார்த்து கொள்வதாகவும் உறுதியளிக்கிறான். அவன் மீது இப்போது கோபத்திற்கு பதில் கனிவும் அன்புமே கியானிக்கு அதிகரிக்கிறது. தான் செய்யும் செயல்கள் நிலையறியாது செய்யும் குழந்தையை நினைத்து இரவெல்லாம் சோகமே உருவாகி பாலோவின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் வடிக்கின்றான்.



கடும் மருத்துவ பயிற்ச்சிக்கு பிறகு சிறிது சிறிதாய் உடல் நலம் தேறும் பாலோவிற்கு மனம் மட்டும் இன்னும் தெளிந்த பாடில்லை. அது உடனடி தீர்வாகதென்றும் தொடர்ந்து செலுத்தும் அன்பும் ஆதரவுமே அவனை சிறிது குணமாகும் என்று மருத்துவர்கள் சொல்ல ஊருக்கு அழைத்து போக ஆயுத்தமாகின்றான்.


நீண்ட கார் பயணத்தில் செல்லும் போது பல்வேறு சேஷ்டைகளே செய்து கொண்டே வருகிறான் பாலோ. முதலில் அவைகளையெல்லாம் ரசித்து வரும் கியானி அவன் காரோட்ட இடையூறாகும் போது சிறிது கோபம் கொள்கிறான் கியானி. உடனே மாமா வீட்டிற்கே திருமவும் போக விரும்புவதாக கூறுகிறான் பாலோ.

காரை ஒரிடத்தில் நிறுத்தி தன் கோபத்தை குழந்தையிடம் காண்பித்தற்காகவும் இன்னும் பாலோ தன்னிடம் நெருங்க வில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டு கதறுகிறான். அந்த முடியாத கைகால்களுடன் தத்தளித்து காரிலிருந்து இறங்கி பாலோ தந்தையை அணைத்து “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது. நான் உன்னை விட்டு என்றும் பிரிய மாட்டேன் என்று கூறுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.


பதினைந்து மகனுக்கு தந்தையாக உணர்ச்சி குவியலாய் நடிப்பை கொட்டியிருப்பவர் நாற்பதே வயதான Kim Rossi Stuart. நடிப்பை விருப்ப பாடமாய் படித்திருக்கும் இவர் ஐந்து வயது முதல் நடித்து வருபவர். இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். இவரது தந்தையும் சகோதரியும் நடிகர்களே.


மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான். அந்த சிரிப்பையும் அழுகையையும் தனது அருமையான நடிப்பால் திரையில் மொழி பெயர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.


இனம், மதம், மொழி என்று அனைத்தையும் கடந்து மானுட உணர்ச்சிகளை பேசுவதே உலக படைப்பு. அப்படியொரு அற்புத படைப்பை தந்திருக்கும் இயக்குநர் Gianni Amelio. தனது பெயரையே தந்தையின் பாத்திர படைப்பிற்கு வைத்து அற்புத ஒளிபதிவோடு கதையை ஒரு கவிதையாக்கியிருக்கிறார்.
ஒரு இரயில் பிராயணத்தில் தொடங்கி ஒர் கார் பிராயணத்தில் முடிவதாய் திரைக்கதை அமைத்திருப்பது வாழ்க்கை பயணத்தின் சந்தோஷம், வலி, அன்பு, சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


2004ல் வெளிவந்த இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விருதுகள் உட்பட உலக அளவில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.


சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.


உடனே பார்க்க டிரைலர் இங்கே

அற்புத கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமி


வாழ்வை நமக்கு நெருக்கமாக காட்டுகிற சினிமாக்கள் ஈரானிய திரைப்படங்கள். இஸ்லாமிய புரட்சிக்கு பின் மிக கடுமையான தணிக்கை முறையிலிருந்து வெற்றி பெறுவது அவ்வளவு லேசான காரியமில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக மிகையில்லை.
இன்று அதி உன்னத நிலையை ஈரானிய திரைப்படங்கள் அடைந்ததற்கு மிக முக்கியமாக காரணிகளில் ஒருவர் தான் அப்பாஸ் கிராஸ்தமி. உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாக்களின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்களுள் முக்கியமானவர்.
1940ம் வருடம் ஜீன் 22ம் தேதி டெஹ்ரானில் பிறந்தார். சிறுவயது முதலே ஓவியத்திலும் கலையிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. அந்த விருப்பத்தின் பேரில் டெஹ்ரான் பல்கலைகழகத்தில் கலையும் ஓவியமும் பயின்றார்.


தனது 18வயதில் ஒரு ஓவிய போட்டியில் பரிசு பெற்றதுடன் தனது வாழ்க்கை இனி கலை ஓவியம் சார்ந்த்தாக இருக்க வேண்டும் என்று மனதார நம்பிக்கை கொண்டார்.


ஆனால் கல்லூரி படிப்பு முடித்ததும் அவருக்கு கிடைத்ததோ டிராபிக் போலிஸ் வேலை. சில நாட்கள் மனம் லயிக்காமல் கிடைத்த வேலையை செய்தார். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியால் விளம்பரங்களுக்கு போஸ்டர் டிசைன் செயவதும் ஓவியம் வரைவதுமாக இருந்தார்.


பெரும் வாழ்க்கை போராட்டத்திற்கு பிறகு விளம்பர படங்கள் எடுக்கும் வாய்ப்பும் கிட்டியது. 1962 முதல் 1966 வரை நான்கு ஆண்டுகள் இரானிய தொலைகாட்சிக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கினார். 1969ல் கிராஸ்மிக்கு பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணமானது. அஹ்மத் கிராஸ்மி, பாஹ்மான் கிராஸ்மி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

1979 புரட்சிக்கு பிறகு பெரும்பாலான கலைஞர்கள் ஈரானை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் குடியேறினர். ஆனால் கிராஸ்தமி தன் சொந்த மண்ணை விட்டு செல்பவன் ஒரு கலைஞனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில் ஈரானிலேயே வாழ்ந்து வந்தார்.

தாய் நாட்டு மண்ணின் மணத்தை அறிந்து கொள்ளவும் அனைத்து வகைப்பட்ட கடை நிலை மனிதர்களின் மனதை அறிந்து கொண்டதின் மூலம் மட்டுமே தனது நீண்ட நாள் கலைவாழ்க்கைக்கு பயணிக்கிறது அதற்கு இதுவே முக்கியமான முடிவாக இருந்தது என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார்.



The Bread and Alley இவர் 1970ம் ஆண்டு இயக்கிய முதல் கறுப்பு வெள்ளை குறும்படம். ஒரு சிறுவன் ரொட்டி துண்டுடன் வீடு செல்லும் போது பசியுடன் துரத்தும் ஒரு நாயை பற்றியது. பத்தே நிமிடங்களில் ஒடகூடிய இக்குறும்படத்தின் மூலம் தான் யார் என்பதை தானே அறிமுகப்படுத்தி கொண்டார்.


அவருக்குள் ஒளிந்திருந்த அந்த கலைஞனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.



The Experience { 1973 } என்ற குறும்படத்தையும் இயக்கினார். இதில் அவர் அவ்வளவாக திருப்தியடையவில்லை. இன்னும் கடுமையாக முயற்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரின் மனதை உறுத்தி கொண்டு இருந்தது.


1974ல் வெளியான The Traveller திரைபடத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் இது 71 நிமிடங்களில் ஒரு முழு நீள திரைப்படமாயிற்று. ஈரானிய தேசிய கால்பந்தாட்டத்தை காண ஆவலுடன் துடிக்கும் ஒரு பத்து வயது சிறுவனின் வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் உள்ளுணர்வுகளையும் சித்தரிக்கும் காவியம். ஒரு விருப்பத்தின் அல்லது அதீத ஆசையின் காரணமாக பதின்ம வயது மனதுக்குள் ஏற்படும் விபரீத எண்ணங்களை சித்தரிக்கும் படமாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியதோடு ஈரானிய சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஒரு அற்புத திரைப்படம்.

So Can I , Two solutions for one problem, A wedding Suit ஆகிய படங்களையும் 1975களில் இயக்கினார்.



அபபாஸ் கிராஸ்தமியின் முதல் திரைப்டம் என்று 1977ல் வெளியான The Report திரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படம் 112 நிமிடங்களில் முடிவடைவதாக எடுக்கப்பட்டது. வரி வசூல் செய்யும் ஒருவன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கையூட்டு பெற முற்படுவதும் பின்னர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயலுவதின் பின்னணியில் பின்னப்பட்ட ஒர் அற்புத நிகழ்வுகள் நிறைந்த திரைப்படம்.


மற்றும் ஒரு பெருமையும் இத்திரைப்படத்திற்கு உண்டு. இத்திரைப்படத்தில் இருபது வயது இளம் பெண்ணாக இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை Shohreh Aghdashloo. இவர் தனது 54 வயதிலும் இன்று வரை அமெரிக்க தொலைகாட்சிகளிலும் ஹாலிவுட்டில் நடிப்பது மட்டுமல்லாது ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானிய நடிகை.


முழுநீள திரைப்படங்களை இயக்கினாலும் குறும்படங்களில் மீதான காதல் இவருக்கு எப்போதும் உண்டு. 1980களிலும் நிறைய குறும்படங்களை இயக்கினார்.



ஈரானை விட்டு வெளியேயும் இவரின் புகழ் பரவ காரணமானது Where Is the Friend's Home? இத்திரைப்படம் 1987ல் வெளியானது.

பள்ளி நண்பனின் நோட்டு புத்தகத்தை அவனிடம் சேர்க்க பாடுபடும் ஒரு சிறுவனின் கதை. அந்த நோட்டு புத்தகம் இல்லையெனில் நண்பன் பள்ளியில் இருந்து வெளியேற்றபடுவான் என்ற பயத்தால் பக்கத்து கிராமத்திற்கு செல்கிறான். வாழ்க்கையின் எளிய நிகழ்வுகளே இந்த திரைப்படத்தின் ஆதாரம். அதுவும் குழந்தைகளின் உலகை இவரை போன்று யதார்த்தமாக காட்சிபடுத்துவதில் இவருக்கு இணை இவரே.

உலக அளவில் பேசப்பட்ட இத்திரைப்படம் ஸ்விஸ் திரைப்பட விழாவில் வெண்கல சிறுத்தை பரிசை பெற்றதோடு டெஹ்ரான் திரைப்பட விழாவில் தங்க பரிசையும் வென்றது.



30,000 மக்களை கொன்று தன் அகோர பசியை தீர்த்து கொண்ட 1990 ஈரானிய கடும் பூகம்பத்தில் பெரிதும் பாதிக்கபட்டார். தன் முந்தைய திரைப்படத்தில் நடித்த மக்களை தேடி புறப்பட்டு அதை ஒரு திரைப்படமாக்கினார். அதுவே 1991ல் வெளியான Life, and Nothing More... இது ஒரு ஆவணப்படம் போன்றும் எடுக்கப்பட்டது. ஆனால் டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுதனம் சிறிதும் இல்லாமல் இருப்பது ஒரு ஆச்சரியமே.




1994ல் Through the Olive Trees என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார். கட்டிட வேலை செய்யும் ஒருவனை திரைப்பட நாயகனாக்கும் முயற்ச்சி பற்றிய கதை. இதுவும் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்டதுடன் இதில் ஊடே ஒரு காதல் கதையும் உண்டு.


இந்த மூன்று திரைப்படங்களும் ஈரானிய மிகச்சிறிய கிராமமான கோக்கர் என்ற சிற்றூரில் எடுக்கப்ப்ட்டதால் இவை Koker trilogy என்று சினிமா ஆர்வலர்களால் ஆர்பரிக்கப்பட்டது.


அப்பாஸ் கிராஸ்தமியின் மேலே உள்ள மூன்று திரைப்படங்களும் எளிமையான தோற்றத்துடன் ஆழமான உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துபவை. ஒரு திரைப்ப்டத்திற்கு தகுதியில்லாதவை என்று ஒதுக்கி தள்ளும் எளிய நிகழ்வுகளை கொண்டே கட்டமைக்கபட்ட்வை. ஆனால் வாழ்வோடு இசைந்த ஆதார சுருதியை மனதின் அடியிலிருந்து மீட்டு திரைப்படங்களாக வடிவமைத்து அதை படைப்பதில் பெரும் வெற்றி பெற்றதோடு திரைப்படங்களுக்கு ஒரு புது இலக்கணத்தை எழுதியிருக்கிறார்.


இந்த Koker trilogy என்ற சொல்லபடுகின்ற திரைப்டங்கள் வெற்றி பெறாத இடங்களே இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் ம்ற்றும் பின்லாந்து ஆகிய அனைத்து நாடுகளின் திரை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வால்ட் டிஸ்னியின் திரைப்பட வெளியீடும் நிறுவனமான Miramax Films நிறுவனம் இத்திரைப்டங்களை அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வெளியிட்டு அப்பாஸ் கிராஸ்தமிக்கு ஒரு மிகப்பெரிய சிவம்பு கம்பளத்தை விரித்து கொடுத்தது.


தான் மட்டும் வரலாற்றில் பதிய வைக்க கூடிய ஒரு இடத்தை அடைந்து விட்டால் போதுமா..?? அதில் மட்டுமே ஒரு நிஜ கலைஞன் திருப்தியடைவதில்லை. தனது வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தவர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் முடிந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் தான் ஆத்ம திருப்தி கொள்ள இயலும்.

அதனால் தான் தனது துணை இயக்குநர் Jafar Panahi க்காக திரைக்கதை எழுதி அவரை இயக்கவும் வைத்த பெருமையும் உண்டு அப்பாஸ் கிராஸ்மிக்கு.


The Jounery, White Balloon ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை மட்டும் எழுதினார். குருவின் பெயரையையும் காப்பாற்றினார் Jafar Panahi.

White Balloon திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்த திரைப்படத்தை பற்றிய எனது முந்தைய பதிவு.



பல திறமையான இயக்குநர்களை கண்டறிந்து அவர்களுக்காக சில திரைபடங்களையும் தயாரித்து சிறந்த திரைப்பட தயாரிபாளருமானார்.




மீண்டும் 1997ல் The Taste of Cherry என்ற திரைபடத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். இந்த திரைப்படமும் அப்பாஸ் கிராஸ்தமியின் மற்ற படங்கள் போலவே பெரிய கதையம்சம் கொண்டதில்லை.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், சந்திப்புகள் என்று சதாரண காட்சியமைப்புகளே. ஆனால் இந்த காட்சியமைப்புகள் உரையாடலில் கிராஸ்தமி உருவாக்கும் அதிர்வலைகள் மிக மிக அழுத்தமானது. திரைப்படம் முடிந்ததும் ஒரு இனம் புரியாத அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க பரிசை தட்டி சென்றது.


1999ல் வெளியானது The Wind Will Carry Us. இந்த திரைப்படத்தை ஏற்கனவே சிலாகித்து எழுதியது இங்கே.

2002ல் இயக்கிய Ten திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட வகையில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு காரின் பயணத்தில் தொடங்கி காரிலேயே முடிவடையும் திரைப்படம்.

காரில் ஒரு தாயும் மகனும் கடும் விவாதத்தில் ஈடுபடுவதாக தொடங்கி அவள் செல்லும் வழியில் லிப்ட் கொடுப்பவர்களின் வாழ்க்கையை பற்றி அவள் அறிந்து கொள்ளும் போது நடைபெறும் உரையாடலில் பயணித்து அதுனூடே திரைப்படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருப்பார். ஒரு திரைப்படத்தை கார் பயணத்தில் தொடங்கி காரிலேயே முடித்து விடும் தைரியம் இவரை தவிர வேறு எவருக்கும் வருமா என்பது சந்தேகமே..?



இதற்கிடையே 2001ல் ஐக்கிய நாடுகளின் International Fund for Agricultural Development என்ற அமைப்பு உகாண்டா நாடுகளின் ஆதரவற்ற எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய ஆவண படமெடுக்க அப்பாஸ் கிராஸ்தமியை தேர்வு செய்தது.


இம்முறை ஈரானுக்கு வெளியே சென்று ABC Africa ஒரு மிகச்சிறந்த ஆவண படத்தை இயக்கி தந்தார். இம்முறையும் குழந்தைகளுடன் பணி புரிய எனக்கு கிடைத்த அரிய சந்தர்பம் என்று நினைவு கூறுகிறார் அப்பாஸ்.



2004ல் மீண்டும் Ten on Ten என்ற ஆவணபடத்தையும் இயக்கினார். இது தனது முந்தைய திரைப்படமான 2002ல் உருவாக்கிய Ten உருவாக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது.


Tickets 2005ல் வெளியான நகைச்சுவை கலந்த திரைப்படம். நாம் அன்றாட பயணிக்கும் பொது போக்குவரத்தான பேருந்துகளிலும் தினசரி சாலைகளில் சந்திக்கும் முன் பின் தெரியாத நபர்களின் ஊடே நடக்கும் சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பு.


இவரின் குறும்பட ஆசை தணியாது போலும். 32 நிமிடங்கள் ஒடும் The Roads of Kiarostami என்ற குறும்படத்தை 2006ல் இயக்கியுள்ளார்.



இதுவரை இயக்கிய திரைபடங்களில் எதிலும் இல்லாத ஒரு புதுமையை கையாண்டு 2008ம் ஆண்டு Shirin என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 114 இரானிய நாடக மற்றும் திரைகலைஞர்களுடன் பிரான்ஸ் நடிகை Juliette Binoche யுடன் இணைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முந்தைய பெர்சிய காதல் கதையை இவர்கள் பார்ப்பது போலவும் அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை வெளிப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளோசப் காட்சிகளை மட்டுமே கொண்ட திரைபப்டமாகும். இதுவரை 65வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

இவரின் திரைப்பயணம் இன்னும் தொடர்கிறது.

இத்தனை உலக விருதுகளை வாரி குவித்திருந்தாலும் அப்பாஸ் கிராஸ்தமி தனது திரைப்படங்களில் எந்த கதையும் சொல்வதும் இல்லை என்று மேலோட்டமான குற்றசாட்டும் இவர் மீது உண்டு. இது சரி இது தவறு அவர் எதையும் வகைப்படுத்துவதுமில்லை என்கிறார்கள் சில உலக சினிமா பார்வையாளர்கள்.

ஆனால் இவரோ ஒன்றை மட்டும் முதன்மை படுத்துவதோ சரி தவறு என்று நிர்ணயிப்பதும் வன்முறையின் ஒரு பகுதிதான் என்கிறார். எனது படங்களில் எது இருக்கிறதோ அவையே எனக்கு பிடித்தவை என்றும் உணர்ச்சி வசப்பட வைப்பது தனக்கு பிடிக்காத விஷயம் என்கிறார்.



பல படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்கார வைக்கும். ஆனால் படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியேறும் போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும். சக்தியை கொடுப்பது போல் எனர்ஜி பூஸ்டர் அல்ல நான் என்கிறார். மேலும் ஒரு நல்ல படம் சக்தியை இழக்க செய்வதாக வாழ்க்கையின் நெருக்கத்தை ஏற்படுத்துவதாதான் இருக்க வேண்டுமே தவிர பார்வையாளனை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக இருக்க கூடாது என்கிறார். { இது நமக்கு மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாக எனக்கு தெரிகிறது }

உலகின் எல்லா இயக்குநர்களுக்கும் எது பிரச்சினையோ அதுதான் ஈரானிய இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றியடையுமா தோல்வியடையுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு தயாரிப்பாளனின் நன்மதிப்பை பெறுவதே மிகப்பெரிய சாதனைதான்.


ஆனாலும் வாழ்வியலோடு இணைந்து வாழ்வின் மெய்மையை கண்டடையும் பயணமாகி அதுனூடே திரைப்படத்தை ஒரு கலையாக கருதி தன்னை ஒரு ஓவியனாக, கலைஞனாக, எடிட்டராக, தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக வடிவமைத்து கொண்டு அந்த கலை வடிவத்தை அன்பாக, நேசமாக, காதலாக யதார்த்தின் ஒரு பதிவாக அவற்றை வெளிப்படுத்துவதால் அப்பாஸ் கிராஸ்தமி ஒரு அற்புத கலைஞன் என்று சொல்வதில் மிகுந்த ஆனந்தமே...

Tuya de hun shi







Tuya de hun shi { Tuya's Marriage}
சீன திரைப்படம்.


மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் தூயா என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.



தூயாவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளோ மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.



தூயாவிற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர்.



ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு வாழ்நாள் முழுவதையும் ஆதரிப்போம் என வாக்குறுதி தருவோரையே தான் மணப்ப்பேன் என் உறுதியோடு கூறுகிறாள் தூயா.



அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.



தூயாவின் பழைய பள்ளி தோழனும் பெரிய செல்வந்தனுமான ஒருவன் அவளை மணக்க விரும்புகிறான். ஆனால் அவளது கணவனை ஒரு விடுதியில் வைத்து பராமரிக்க மட்டுமே இயலும் என்றும் அனைவரும் சேர்ந்து இருப்பது இயலாது என கூறி கணவனை விடுதியில் சேர்த்து விடுகின்றனர். கணவனும் அரை மனதுடன் சம்மதித்து விடுதியில் தங்குகிறான்.
பின்னர் மன உளச்சலால் குடும்பத்திற்கு தான் பாரமாக இருப்பதை எண்ணி தற்கொலைக்கு முயலுகிறான். இதை அறிந்த தூயா பதறியடித்து துடித்து போய் மருத்துவமனைக்கு ஒடி வருகிறாள்.


தனது உடல் சுகத்திற்க்காக தான் நண்பன திருமணத்திற்கு ஒப்பு கொண்டதாகவும் நினைக்கிறாள். நண்பனின் செயல்களுக்கும் தூயாவிற்கு பிடிக்கவில்லை. எனவே அவனை மணக்கும் எண்ணத்தையே அடியோடு விட்டு விடுகிறாள்.

தூயாவின் அண்டை வீட்டுகாரனான சென்கிக்கு தூயா மீதும் அவளது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு.
சென்க்கியின் மனைவியோ பணத்திற்கு ஆசைப்பட்டு இவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஒடிப் போய் விடுகிறாள். வாழ்க்கையையே வெறுத்த சென்கி தூயாவின் குடும்பத்துடன் அதீத பாசத்துடன் பழகுகிறான்.
அந்த பாலைவன பிரதேசத்தில் தூயா தினமும் தண்ணீருக்காக மிகுந்த தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவளுக்காக கிணறு தோண்டும் முய்ற்ச்சியில் சென்கி ஈடுபடுகிறான். எதிர்பாராத விதமாக கிணறு தோண்டும் போது விபத்தில் சிக்குகிறான். தனக்காக சிரம்ப்படும் சென்கிக்காக தூயா வருத்தமும் வேதனையும் அடைகிறாள்.
சென்கியும் தூயாவை மணக்க நினைக்கிறான். அவளுக்கும் அவன் மீது காதல் அரும்புகிறது.
ஆனால் விதி விடாது தூயாவை துரத்துகிறது...
தூயாவின் திருமணம் நடந்ததா..?? அது யாருடன்..??




Wei Lu வின் கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம்.


கால் நடைகளுடனும் குளிருக்கான மதுவுடனும் அவர்களின் வாழ்வோடு இசைந்து செல்வதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர்.
நுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் காட்சிகளை சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதை அற்புதமாக செய்திருக்கிறார் இயக்குநர் Quanan Wang



இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் மீதும் அந்த பாலைவனத்திலும் ஒளிப்பதிவு அருமை. நம்மை படத்துடன் இயைந்து அழைத்து செல்கிறார் இயக்குநர்.

தூயாவாக நடிக்கும் Nan Yu மிகச்சிறந்த சீன நடிகை. மிக துல்லியமான உணர்ச்சிகளை வெளிகாட்டுவதிலும் நம்மை அதிர வைக்கிறார்.
தாயாக அவர் காட்டும் அன்பும் பரிதவிப்பும் அத்தனை இயல்பு.


உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..?? என்ற கேள்வி மனதின் அடிமனதில் ஒரு சுமையாக சித்தரிக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கடைசி காட்சியில் தூயாவின் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்



பெண்ணின் மனதை உணர்த்தும் உமா மகேஸ்வரியின் கவிதை ஒன்று:



எற்றி உடைத்துப் போன
பீங்கான் சிதறல்களைப்
பெருக்கிச் சுத்தப்படுத்துகையில்
கேவலத்தின் நுனியில் நிற்கிறேன்

புறக்கணிப்புகளைத்
தொடுத்துக் கொள்கிறேன்
பூக்களைப்போல மென்மையாக.
முகச்சுழிப்புகளின் கசப்பில்
உப்பும் புளிப்பும் விரவி
உண்ணத்தகுந்ததாகப் பதப்படுத்துகிறேன்.

என் செத்த கோபத்தை மட்டும்
செய்வதறியாது
எறிகிறேன்
கழிவறைக் கோப்பைக்குள் .....



இந்த சீன திரைப்படம் பெர்லின் மற்றும் பல சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்தது. அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.


2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகளை அள்ளியது.


சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.



உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்


டிஸ்கி: சற்றே விரிவான மீள் பதிவு.

Happy Times

















ஜகோ 52 வயதான கட்டை பிரம்மச்சாரி. தொழிற்ச்சாலை மூட்பட்டதால் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டுகிறார். ஆனாலும் பல முறை காதல் முயற்ச்சியில் தோல்வியுற்று இன்னும் தன் கனவுலக தேவதையை தேடி வருகிறார். கையில் காசில்லாத இவரை யார் கல்யாணம் பண்ணுவார்கள். எப்படியாவது பணம் சேர்க்க தனது சீடன் ஒருவனிடம் ஆலோசனை கேட்கிறார்.


அவனும் தொழிற்சாலை பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் பல ஜோடிகள் ஜொள்ளு விட்டு திரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் பல ஆண்டுகளாக ஒடாது பாழைடைந்து கிடக்கும் பேருந்தை புதுப்பித்து காதலர் தங்கும் ஒய்வறையாக {பச்சையாய் சொன்னா பலான அறை} மாற்றி அதற்கு “Happy Times Hotel" என்று பெயரிட்டு நல்ல காசு பார்க்கலாம் என்று ஐடியா கூறுகிறான்.


தன் வயதுக்கு இதெல்லாம் தேவையா என்று நினைத்தாலும் கல்யாண ஆசையால் அரை மனதுடன் சம்மதிக்கிறார். இருவரும் இரவு பகலாக உழைத்ததால் “Happy Times Hotel" ரெடி.....



வெயிட்.... கல்யாண மேட்டருக்கு வருவோம்.



இதுவரை எவரும் சிக்காத நிலையில் மணமுறிவு ஏற்பட்ட 40 வயது இளம் பெண்ணுக்கு மணமகன் தேவை என்று தரகர் ஒருவர் கூறவே ஒரு ரெஸ்டாரண்டில் டேட்டிங் ஏற்பாடாகிறது. ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம் என்பது அகில உலக பழமொழியோ என்னவோ, ஜகோ அந்த உணவு விடுதி தனக்கு சொந்தமாதென்றும் இன்னும் நிறைய சொத்து உள்ளதென்றும் சும்மா அளந்து விடுகிறார். உடனே அவளும் சம்மதிக்கிறாள்.



பட்சி சிக்கிடுச்சுடான்னு சந்தோஷமாக சீடனிடம் சொல்ல அண்ணாமலை போல சைக்கிளில் பறக்கிறார். அவனும் தலைவா,,Happy Times வந்த வேளை... எப்படியாவது செட்டில் ஆயிடனும் சொல்லி வாழ்த்துகிறான்.



டேட்டிங் முடிந்து மீட்டிங். தன் வீட்டுக்கு விருந்து வருமாறு சொல்கிறாள் அவள். பூங்கொத்து ஒன்றை பலத்த பேரம் பேசி வாங்கி கொண்டு
பெண்மணி இருக்கும் வீட்டை கண்டு பிடிக்கிறார். அங்கோ அவளது 10வயது குண்டு மகன் சதா சாப்பிட்டு கொண்டே வீடியோ கேம்ஸ் ஆடி கொண்டு இருக்கிறான்.


மூவரும் சாப்பிட உட்கார்ந்ததும் “அந்த சனியனையும் சாப்பிட கூப்பிடு என்கிறாள் பெண்மணி”.. கைகளே கண்களாய் தட்டு தடுமாறி வந்து அமர்கிறாள் யிங்.


என் கணவனின் முதல் மனைவியின் பார்வையிழந்த பெண் என்றும் இத்தையும் என் தலையில் கட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து விட்டு ஒடிவிட்டான் என்று புலம்புகிறாள். ஆனால் நான் தான் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருவதாய் அவளும் தன் பாட்டுக்கு அளந்து விடுகிறாள். விருந்து முடித்து தன் விடுதி வேலைக்கு திரும்புகிறார் ஜகோ.


அவர் சென்றதும் யிங்கை படாத பாடு படுத்துகிறாள். சமையல் பாத்திரம் அனைத்தையும் கழுவினால் தான் அடுத்த வேளை உணவு என்கிறாள். அத்துடன் உன்னை விரைவில் தலை முழுகினால் தான் எனக்கு நிம்மதி என்று பொரிந்து தள்ளுகிறாள். தன் விதியை நொந்த படியே
பார்வை வற்றி போனாலும் கண்ணீல் நீர் வற்றாது அழுது கொண்டே அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து முடிக்கிறாள் யிங்.



மறு நாளும் ஜகோ சந்திக்க சென்றதும் இந்த பெண்ணுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தால் மட்டுமே கல்யாண்ம் என்று குண்டை தூக்கி போடுகிறாள் குண்டு பெண்மணி. குழம்பி போய் செய்வதறியாது சீடனிடம் விஷயத்தை சொல்லவே அவனும் சரி.. இட்டுகினு வாங்க ஏதாவது ஏற்பாடு செய்யலாம். குருட்டு பெண் தானே.. இருக்கவே இருக்கு Happy Times Hotel. அதுக்கு இந்த மாதிரி ஆள் தான் தேவைன்னு அவரை சமரசம் செய்கிறான்.



மறு நாள் வந்த வேகத்தோடு யிங்கை அழைத்து கொண்டு செல்கிறார். வரும் வழியில் பேருந்தில் அவள் கண்கள் குளமாக அமர்ந்து வருவதை காண்கிறார். சித்தி செய்யும் கொடுமைகளை போட்டு உடைக்கிறாள் யிங். தான் யாரையும் நம்ப தயாரில்லை என்கிறாள் யங்.



அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உனக்கு கண்டிப்பாக முடிந்த உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்து அவளை மகிழ்ச்சி படுத்த ஐஸ்கீருமும் வாங்கி கொடுக்கிறார் ஜகோ.



தனது அறையில் தங்க வைத்து விட்டு பாழடைந்த தொழிற்சாலையில் போய் படுத்துகிடக்கிறார். மாற்று உடை கூட இல்லாத பெண்ணுக்கு தனது பழைய தொலைகாட்சி பெட்டியை விற்று புதிய உடையும் வாங்கி கொடுக்கிறார்.




மிகுந்த சந்தோஷத்துடன் மறு நாள் மைதானத்திற்கு சென்று பார்த்தால் Happy Times Hotel அம்பேல். முட் செடியும் புதரும் மண்டி கிடப்பதால் நகராட்சி ஊழியர்கள் அனைத்தையும் சுத்தம் செய்ததுடன் பஸ்ஸையும் தூக்கி கொண்டு சென்று விட்டார்கள்.



சீடனும் ஜகோவும் கையில் இருந்த காசையெல்லாம் போட்டு புதுப்பித்த பஸ் பறி போனதை எண்ணி சோகமே உருவாய் செய்வதறியாவது திகைகின்றனர். யிங்கை திருப்ப கொண்டு வந்து விடுதாய் கூற அடியோடு மறுக்கிறாள் பெண்மணி. அவளுக்கு மசாஜ் செய்வது தெறியும். அதை வைத்து மசாஜ் பார்லரில் சேர்த்து விடுமாறு கூறுகிறாள்.



நாட்கள் செல்ல செல்ல பார்வையற்ற யிங் மீது இனம் புரியாத பாசமாகிறார். மனைவியை தேடிய தனக்கு ஒரு மகள் கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறார்.



அவளை மீண்டும் கொடுமை படுத்தும் பெண்மணியிடம் திருப்பியனுப்ப மனமில்லாமல் அவளை சந்தோஷப்படுத்த தொழிற்சாலையிலேயே மசாஜ் போன்று ஒரு இடத்தை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்குகிறார்.


நண்பர்களையே தினசரி கஸ்டமர்கள் போன்று சென்று வர ஏற்பாடு செய்து கையில் உள்ள காசையெல்லாம் டிப்ஸ் போல அளித்தும் வரவே தன்க்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்த்தாகவும் நல்ல வருமானம் வருவதாகவும் மகிழ்கிறாள் யிங்.


ஆனால் ஒரு நாள் தட்டு தடுமாறி செல்லும் போது இந்த இடம் பார்லரா என்று சிறிது சந்தேகமும் கொள்கிறாள். கையில் இருந்த பணமெல்லாம் காலியாகவே டிப்ஸ் அளிக்க பணமில்லாத நிலையில் போலி நோட்டுகளை தயார் செய்து அளிக்கிறார் ஜகோ.


நிறைய டிப்ஸ் சேர்ந்த்தால் இன்றைக்கு நல்ல ஒட்டலில் போய் உணவருந்தாலாம் என்கிறாள் ஜகோ. அய்யோ அந்த பணத்தையெல்லாம் நீ செலவழிக்காதே.. அதை பத்திராமாக சேர்த்து வை என்று சமாளிக்கிறார். யிங்கும் ஆமாம் பணம் முழுவதையும் சேமித்து எனக்கு பார்வை கிடைத்தால் என் தந்தையை தேடி கண்டு பிடிப்பேன் என்கிறாள். அது தவிர பெற்ற தந்தையே புறக்கணித்த என்னை மகளாய் நினைக்கும் உங்களை காண வேண்டும் என்று அன்பாய் கூறவே நெகிழ்ந்து போகிறார் ஜகோ.


தனது தந்தையிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தை கொடுக்கிறாள். அதை தனக்காக படிக்குமாறும் கூறுகிறாள். படித்து முடித்ததும் தன்னை பற்றி ஒரு வரியும் எழுத வில்லையா என்று ஆதங்கமாய் அவள் கேட்கவும் எழுத்துக்கள் சிறியதாய் இருப்பதாய் தெரியவில்லை. நாளை காலை நிதானமாய் படித்து சொல்வதாய் சொல்லி சமாளிக்கிறார் ஜகோ. ஆனால் பொறுப்பில்லாத தக்ப்பன் இந்த பார்வையில்லாத பெண்ணை மற்ந்தே விட்டான் போலும்.



திருமண நாள் குறிக்க பெண்மணியின் வீட்டிற்கு சென்ற ஜகோ மிக்ப்பெரிய பூச்செண்டுடன் ஒருவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அலறி துடிக்கிறார். பெண்மணியிடம் சண்டையிடுகிறார். அவளோ... நீயே அந்த ஒட்டல்ல வேலை பார்க்கிற நாய். உனக்கெல்லாம் கல்யாணமா.?? என்னையே பொய் சொல்லி ஏமாத்தவா பார்க்கிற.. என்று திட்டி ஜகோவை அடித்து விரட்டுகிறார்.



நினைத்து பார்க்க முடியாத ஏமாற்றத்துடனும் மிகுந்த பசியுடனும் ஒரு ஹோட்டலில் சாப்பிட போகிறார். ஒரு பேப்பரை எடுத்து என்னவோ எழுதியும் தள்ளுகிறார். சாப்பிட கூட பிடிக்காமல் வாழ்க்கையே வெறுத்து போய் ஒரு Full வாங்கி கொண்டு ரோட்டோரமாய் உட்கார்ந்து கொண்டு பெண்மணியை கண்டபடி திட்டியபடியே புலம்பி தீர்க்கிறார்.




இரவும் நேரமாகி பாட்டிலும் காலியாகி விடவே தட்டு தடுமாறி ரோட்டில் நடந்து செல்லும் போது வேகமாக வந்த டிரக் ஜகோ மீது மோத தலையில் பலத்த அடி பட்டு வீழ்ந்து கிடக்கிறார். ஆள் அரவம்ற்ற சாலையில் பயந்து போன டிரைவர் முதலில் ஒடி விட நினைத்து பின்னர் மனிதாபிமானத்துடன் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கிறான்.




தகவல் அறிந்து நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு ஒடி வருகின்றனர். மருத்துவரும் நிலைமை பரவாயில்லை. அவரது மகளுக்கு முதலில் தகவல் தெரிவியுங்கள் என்கிறார்.



மகளா.. ?? அவருக்கு திருமணமே ஆகவில்லை என்கின்றனர் நண்பர்கள். அவர் மகள் யிங்கிற்கு எழுதிய கடிதம் அவர் சட்டை பையில் எப்படி வந்தது என்று கேட்கிறார் மருத்துவர். அவளை முதலில் அழைத்து வாருங்கள் என்றும் கூறுகிறார்.



நிலைமையை புரிந்து கொண்ட நண்பர்கள் யிங்கை அழைத்து வர ஜகோவின் அறைக்கு விரைகின்றனர். ஆனால் அங்கோ அதிர்ச்சியாய் அவள் இல்லை.



தான் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிக மிக சந்தோஷமான நாட்களாய் ஜகோவிடம் இருந்த நாட்களே என்றும் அவருக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த கடைமை பட்டவளாய் இருப்பேன் என்றும் அவளை மகிழ்விக்கவும் அவளுக்கு மன உறுதியளிக்கவும் அவ்ர்கள் செய்த தந்திரங்கள் அனைத்தும் தனக்கு தெரியுமென்றும் தெரிந்தே அவளும் முழு மனதுடன் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவித்த்தாக கூறி ஒரு டேப் ரிகார்டரில் தனது நன்றியை பதிந்து வைத்து விட்டு எங்கோ சென்று விட்டாள் யிங்...



கையில் இருந்த மகளுக்கான லெட்டரில் ஜ்கோ, அருமை மகளுக்காக தான் பணம் சேமித்து வருவதாயும் விரைவில் அவள் கண்பார்வை அடைய அனைத்து ஏற்பாடுகளையும் செயவதாயும் அதுவரை மன உறுதியுடன் இருக்குமாறு எழுதி இருப்பதை படித்து சிலையாய் நிற்கின்றனர் நண்பர்கள்....


நகைச்சுவையுடன் ஆரம்பித்து நெகிழ்வாய் முடிகிறது திரைப்படம்.



Yan Mo என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 2000ம் ஆண்டில் வெளியானதுடன் பல பரிசுகளை வென்றது.



இயக்கம் Yimou Zhang. மிகச்சிறந்த சீன இயக்குநர். பார்வையற்ற பெண்ணாக நடித்த Jie Dong சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்று தந்த திரைப்படம்.



விவரிக்க முடியாத தனித்துவமான வசீகரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது இந்த திரைப்ப்டம். நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது. கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டும்படியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். அப்படி ஒரு அலாதி நிகழ்வுகளை அமைதியாக அதே சமய்த்தில் அழுத்தமாக சொன்ன Yimou Zhang இயக்குநரை பாராட்ட வார்த்தைகளில்லை.


சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Plz Don't Miss it.....

Or My Treasure











==================================================================
நூறு நிமிடம் மட்டுமே ஒடும் இத்திரைப்ப்டத்தின் ஆழமும், பார்த்த பின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது.


ஒரு சாதாரண கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? கனத்த இதயத்துடன் சரியாக உறங்க முடியாமல் தவித்த நாளாகி போனது.


=================================================================


ருத்தி 40 சுமார் வயதுள்ள தாய். அவளின் ஒரே செல்ல மகள். Or (அவ பெயரே அதுதான் ) 18வயது இளநங்கை.


ருத்தி கடந்த இருபது வருடமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டே தன் பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறாள். பதின்ம வயதை அடைந்ததும் ஒரளவு உலகம் புரிந்ததும் தாயின் தொழிலை அடியோடு வெறுக்கிறாள் ஒர்.


தாயின் உடல் நிலை மோசமடைவதை கொண்டு அவளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறாள். காலையில் படிப்பும் மதியம் ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலையும் பார்க்கிறாள். அப்போதும் வருமானம் போதவில்லை. இரவெல்லாம் கண் விழித்து தெருவோரங்களில் கிடக்கும் காலி பாட்டில்களை பொறுக்கி அதையும் வாங்கும் கிடங்குகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். கொஞ்சம் வருமானம் கிடைக்கிறது. இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணம் ஒரளவுக்கே இருக்கிறது.



எனவே தாய்க்கு எப்படியாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறாள். தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைக்கிறாள். தாயின் “தொழில்” தெரிந்து எவரும் உதவ முன் வரவில்லை.


பள்ளி ஆசிரியை ஒருவர் உதவ முற்பட்டு “எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை” உங்கம்மாவை போக சொல்றியா” என ஆசிரியை கேட்க மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் வந்து சொல்கிறாள்.

அம்மாவோ ‘எவ்வளவு சம்பளம் என்று கேட்க .. மாதம் இரண்டாயிரம் என்கிறாள் ஒர். அதை ஒரு நாள்ல சம்பாதிச்சுடுவேன் என்கிறாள். அந்த ஈனமான தொழில் வேண்டாம் என்கிறாள் ஒர்.


ஒரு வழியாக அம்மாவை சம்மதிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறாள். அங்கு போனால் மானாவாரியாக வீட்டு வேலையுடன் நாய்க்கு வேளா வேளைக்கு உணவிடுவதுதான் முக்கியமான வேலை என்கிறாள் எஜமானி. ருத்திக்கோ இதெல்லாம் முன்பின் செய்து பழக்கமில்லை. மகள் கோவிப்பாளே என்று பொறுத்து கொண்டு சில நாள் வேலை பார்க்கிறாள்.



விடாது துரத்தும் பண கஷ்டத்தாலும் “தொழிலை” விட முடியாத நிர்பந்ததாலும் அன்று இரவு ஒர் தூங்கியதும் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். ‘இரவு ராணி”க்காக காத்திருந்த பலருக்கு விருந்தாகிறாள். கொஞ்சம் பணமும் கிடைக்கிறது. மறுநாள் இதனையறிந்து ஒர் கடும் கோவம் கொள்கிறாள். அம்மாவை வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டும் சென்று விடுகிறாள்.

இது போன்று இரவுகள் தொடரவே வீதிக்கு வந்து தாயை தடுக்கிறாள் ஒர். மகளுக்காக தன்னை மீண்டும் வருத்தி கொள்கிறாள் ருத்தி.


தான் வேலை செய்யும் ஒட்டல் முதலாளியின் மகனுடன் ஒர் நெருங்கி பழகுகிறாள். அவனும் ஒர் படும் கஷ்டத்தால் அவளுக்கு பல விதத்தில் உதவுகிறான். இதையறிந்த அந்த பையனின் தாய் ருத்தியிடம் முறையிடுகிறாள். ‘உங்க பெண்ணை கொஞ்சம் அடக்கி வைங்க”. அவளை விட ஆறு மாதம் சிறியவன் அவன். ‘இதெல்லாம் ஒத்து வராது என்கிறாள். மகளிடம் அன்பாக பேசி புரியவைக்கிறாள். ஒர் அந்த பையனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறாள்.




ருத்தி தொழிலை விட்டு விட போவதாக ’கஸ்டமர்களிடம் கூற அவர்களுக்கு ‘கஷ்டமாய் போகிறது. விடாது துரத்தி வீட்டுக்கே வந்து விடுகிறான் ஒருவன். மகள் படும் அவஸ்தைகளை நினைத்து மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறாள் ருத்தி.



வெகு நேரம் வேலை செய்வதாலும் பல நேரம் தனியே சுற்றி திரிவதாலும் அவளை குறி வைத்து சுற்றி திரிகிறார்கள் ‘ரோட் சைடு ரோமியோக்கள்”. அவர்கள் வலையில் சிக்காமல் வீடு வந்து சேருகிறாள் ஒர்.



பண கஷ்டமும் அம்மாவின் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்வதறியாது நொந்து போகிறாள் ஒர். வீட்டுக்கார கிழவன் தொடரும் வாடகை பாக்கிக்காக ஒரை ஒரு நாள் வாடகைக்கு கேட்கிறான். முதலில் முடியாது என மறுத்த ஒர், வேறு வழி தெரியாமலும் தொடரும் பண பிரச்சனையாலும் சில மணி நேரம் என மட்டும் என்று சம்மதிக்கிறாள்.



தோழி ஒருத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறாள். முதலில் வந்த இடம் எது என்று தெரியாமல் முழிக்க பிறகு தன் நிலையையும் தாயின் நிலைமையும் மட்டுமல்ல, இந்த சமூகத்தையும் முழுவதையும் புரிந்து கொண்டவளாயும் அந்த பதின்ம வயது பெண் தன் ‘வாடிக்கையாள’ னுக்காக கட்டிலில் காத்திருக்கிறாள்.



இத்துடன் நிறைவடைகிறது திரைப்படம்.



தாய்க்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்துடன் வறுமைச் சூழலில் நிலவும் இருவருக்குள் ஏற்படும் மன அழுத்தங்களையும் சமூக அவலங்களையும், ஆணாதிக்க வக்கிரங்களையும் மனதை அதிர வைக்கும் கொடுமையான காட்சிகளுடன் சித்தரிக்கும் திரைப்படம். சில காட்சிகளை எழுத முடியாமல் மனம் அஞ்சுகிறது...



விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எந்த வித கோட்பாடுகளையும் உடைத்து தூர எறிந்து விடும் என்பதற்கு இத்திரைப்படம் சான்று. இயக்கம் Keren Yedaya. இவரும் ஒரு பெண்மணியே. இது இவரது முதல் திரைப்பட இயக்கம் என்று நம்ப முடியவில்லை.



ருத்தியாக நடித்திருப்பது Ronit Elkabetz . இஸ்ரேல் நாடக நடிகையாக துவங்கி பின் திரைப்பட நடிகையானவர். பல விதப்பட்ட பாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். 1994 ல் இஸ்ரேல் திரைப்பட அகாடமியின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றவர். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.




மகள் ஒர் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பது Dana Ivgy. இவரின் தந்தை இஸ்ரேலின் மிகச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட நடிகருள் ஒருவரான Moshe Ivgy. Dana முறைப்படி நடிப்பு பயிற்ச்சி பெற்றதுடன் சிறு வயது முதலே பல இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



2004 ல் வெளிவந்து பல உலக விழா திரைவிழாக்களில் பங்கு பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசை அள்ளியதுடன் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிய திரைப்படம்.


நிச்சயம் பார்க்க வேண்டிய படமா..??? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்...

 

©2009 butterfly Surya | by TNB