==================================================================
நூறு நிமிடம் மட்டுமே ஒடும் இத்திரைப்ப்டத்தின் ஆழமும், பார்த்த பின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது.
ஒரு சாதாரண கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? கனத்த இதயத்துடன் சரியாக உறங்க முடியாமல் தவித்த நாளாகி போனது.

=================================================================
ருத்தி 40 சுமார் வயதுள்ள தாய். அவளின் ஒரே செல்ல மகள். Or (அவ பெயரே அதுதான் ) 18வயது இளநங்கை.
ருத்தி கடந்த இருபது வருடமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டே தன் பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறாள். பதின்ம வயதை அடைந்ததும் ஒரளவு உலகம் புரிந்ததும் தாயின் தொழிலை அடியோடு வெறுக்கிறாள் ஒர்.
தாயின் உடல் நிலை மோசமடைவதை கொண்டு அவளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறாள். காலையில் படிப்பும் மதியம் ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலையும் பார்க்கிறாள். அப்போதும் வருமானம் போதவில்லை. இரவெல்லாம் கண் விழித்து தெருவோரங்களில் கிடக்கும் காலி பாட்டில்களை பொறுக்கி அதையும் வாங்கும் கிடங்குகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். கொஞ்சம் வருமானம் கிடைக்கிறது. இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணம் ஒரளவுக்கே இருக்கிறது.
எனவே தாய்க்கு எப்படியாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறாள். தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைக்கிறாள். தாயின் “தொழில்” தெரிந்து எவரும் உதவ முன் வரவில்லை.
பள்ளி ஆசிரியை ஒருவர் உதவ முற்பட்டு “எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை” உங்கம்மாவை போக சொல்றியா” என ஆசிரியை கேட்க மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் வந்து சொல்கிறாள்.
அம்மாவோ ‘எவ்வளவு சம்பளம் என்று கேட்க .. மாதம் இரண்டாயிரம் என்கிறாள் ஒர். அதை ஒரு நாள்ல சம்பாதிச்சுடுவேன் என்கிறாள். அந்த ஈனமான தொழில் வேண்டாம் என்கிறாள் ஒர்.
ஒரு வழியாக அம்மாவை சம்மதிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறாள். அங்கு போனால் மானாவாரியாக வீட்டு வேலையுடன் நாய்க்கு வேளா வேளைக்கு உணவிடுவதுதான் முக்கியமான வேலை என்கிறாள் எஜமானி. ருத்திக்கோ இதெல்லாம் முன்பின் செய்து பழக்கமில்லை. மகள் கோவிப்பாளே என்று பொறுத்து கொண்டு சில நாள் வேலை பார்க்கிறாள்.
விடாது துரத்தும் பண கஷ்டத்தாலும் “தொழிலை” விட முடியாத நிர்பந்ததாலும் அன்று இரவு ஒர் தூங்கியதும் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். ‘இரவு ராணி”க்காக காத்திருந்த பலருக்கு விருந்தாகிறாள். கொஞ்சம் பணமும் கிடைக்கிறது. மறுநாள் இதனையறிந்து ஒர் கடும் கோவம் கொள்கிறாள். அம்மாவை வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டும் சென்று விடுகிறாள்.
இது போன்று இரவுகள் தொடரவே வீதிக்கு வந்து தாயை தடுக்கிறாள் ஒர். மகளுக்காக தன்னை மீண்டும் வருத்தி கொள்கிறாள் ருத்தி.
தான் வேலை செய்யும் ஒட்டல் முதலாளியின் மகனுடன் ஒர் நெருங்கி பழகுகிறாள். அவனும் ஒர் படும் கஷ்டத்தால் அவளுக்கு பல விதத்தில் உதவுகிறான். இதையறிந்த அந்த பையனின் தாய் ருத்தியிடம் முறையிடுகிறாள். ‘உங்க பெண்ணை கொஞ்சம் அடக்கி வைங்க”. அவளை விட ஆறு மாதம் சிறியவன் அவன். ‘இதெல்லாம் ஒத்து வராது என்கிறாள். மகளிடம் அன்பாக பேசி புரியவைக்கிறாள். ஒர் அந்த பையனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறாள்.
ருத்தி தொழிலை விட்டு விட போவதாக ’கஸ்டமர்களிடம் கூற அவர்களுக்கு ‘கஷ்டமாய் போகிறது. விடாது துரத்தி வீட்டுக்கே வந்து விடுகிறான் ஒருவன். மகள் படும் அவஸ்தைகளை நினைத்து மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறாள் ருத்தி.
வெகு நேரம் வேலை செய்வதாலும் பல நேரம் தனியே சுற்றி திரிவதாலும் அவளை குறி வைத்து சுற்றி திரிகிறார்கள் ‘ரோட் சைடு ரோமியோக்கள்”. அவர்கள் வலையில் சிக்காமல் வீடு வந்து சேருகிறாள் ஒர்.
பண கஷ்டமும் அம்மாவின் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்வதறியாது நொந்து போகிறாள் ஒர். வீட்டுக்கார கிழவன் தொடரும் வாடகை பாக்கிக்காக ஒரை ஒரு நாள் வாடகைக்கு கேட்கிறான். முதலில் முடியாது என மறுத்த ஒர், வேறு வழி தெரியாமலும் தொடரும் பண பிரச்சனையாலும் சில மணி நேரம் என மட்டும் என்று சம்மதிக்கிறாள்.
தோழி ஒருத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறாள். முதலில் வந்த இடம் எது என்று தெரியாமல் முழிக்க பிறகு தன் நிலையையும் தாயின் நிலைமையும் மட்டுமல்ல, இந்த சமூகத்தையும் முழுவதையும் புரிந்து கொண்டவளாயும் அந்த பதின்ம வயது பெண் தன் ‘வாடிக்கையாள’ னுக்காக கட்டிலில் காத்திருக்கிறாள்.
இத்துடன் நிறைவடைகிறது திரைப்படம்.
தாய்க்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்துடன் வறுமைச் சூழலில் நிலவும் இருவருக்குள் ஏற்படும் மன அழுத்தங்களையும் சமூக அவலங்களையும், ஆணாதிக்க வக்கிரங்களையும் மனதை அதிர வைக்கும் கொடுமையான காட்சிகளுடன் சித்தரிக்கும் திரைப்படம். சில காட்சிகளை எழுத முடியாமல் மனம் அஞ்சுகிறது...

விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எந்த வித கோட்பாடுகளையும் உடைத்து தூர எறிந்து விடும் என்பதற்கு இத்திரைப்படம் சான்று. இயக்கம் Keren Yedaya. இவரும் ஒரு பெண்மணியே. இது இவரது முதல் திரைப்பட இயக்கம் என்று நம்ப முடியவில்லை.
ருத்தியாக நடித்திருப்பது Ronit Elkabetz . இஸ்ரேல் நாடக நடிகையாக துவங்கி பின் திரைப்பட நடிகையானவர். பல விதப்பட்ட பாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். 1994 ல் இஸ்ரேல் திரைப்பட அகாடமியின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றவர். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
மகள் ஒர் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பது Dana Ivgy. இவரின் தந்தை இஸ்ரேலின் மிகச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட நடிகருள் ஒருவரான Moshe Ivgy. Dana முறைப்படி நடிப்பு பயிற்ச்சி பெற்றதுடன் சிறு வயது முதலே பல இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2004 ல் வெளிவந்து பல உலக விழா திரைவிழாக்களில் பங்கு பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசை அள்ளியதுடன் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிய திரைப்படம்.
நிச்சயம் பார்க்க வேண்டிய படமா..??? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்...
Posted by
வண்ணத்துபூச்சியார்