Tuya de hun shi







Tuya de hun shi { Tuya's Marriage}
சீன திரைப்படம்.


மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் தூயா என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.



தூயாவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளோ மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.



தூயாவிற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர்.



ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு வாழ்நாள் முழுவதையும் ஆதரிப்போம் என வாக்குறுதி தருவோரையே தான் மணப்ப்பேன் என் உறுதியோடு கூறுகிறாள் தூயா.



அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.



தூயாவின் பழைய பள்ளி தோழனும் பெரிய செல்வந்தனுமான ஒருவன் அவளை மணக்க விரும்புகிறான். ஆனால் அவளது கணவனை ஒரு விடுதியில் வைத்து பராமரிக்க மட்டுமே இயலும் என்றும் அனைவரும் சேர்ந்து இருப்பது இயலாது என கூறி கணவனை விடுதியில் சேர்த்து விடுகின்றனர். கணவனும் அரை மனதுடன் சம்மதித்து விடுதியில் தங்குகிறான்.
பின்னர் மன உளச்சலால் குடும்பத்திற்கு தான் பாரமாக இருப்பதை எண்ணி தற்கொலைக்கு முயலுகிறான். இதை அறிந்த தூயா பதறியடித்து துடித்து போய் மருத்துவமனைக்கு ஒடி வருகிறாள்.


தனது உடல் சுகத்திற்க்காக தான் நண்பன திருமணத்திற்கு ஒப்பு கொண்டதாகவும் நினைக்கிறாள். நண்பனின் செயல்களுக்கும் தூயாவிற்கு பிடிக்கவில்லை. எனவே அவனை மணக்கும் எண்ணத்தையே அடியோடு விட்டு விடுகிறாள்.

தூயாவின் அண்டை வீட்டுகாரனான சென்கிக்கு தூயா மீதும் அவளது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு.
சென்க்கியின் மனைவியோ பணத்திற்கு ஆசைப்பட்டு இவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஒடிப் போய் விடுகிறாள். வாழ்க்கையையே வெறுத்த சென்கி தூயாவின் குடும்பத்துடன் அதீத பாசத்துடன் பழகுகிறான்.
அந்த பாலைவன பிரதேசத்தில் தூயா தினமும் தண்ணீருக்காக மிகுந்த தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவளுக்காக கிணறு தோண்டும் முய்ற்ச்சியில் சென்கி ஈடுபடுகிறான். எதிர்பாராத விதமாக கிணறு தோண்டும் போது விபத்தில் சிக்குகிறான். தனக்காக சிரம்ப்படும் சென்கிக்காக தூயா வருத்தமும் வேதனையும் அடைகிறாள்.
சென்கியும் தூயாவை மணக்க நினைக்கிறான். அவளுக்கும் அவன் மீது காதல் அரும்புகிறது.
ஆனால் விதி விடாது தூயாவை துரத்துகிறது...
தூயாவின் திருமணம் நடந்ததா..?? அது யாருடன்..??




Wei Lu வின் கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம்.


கால் நடைகளுடனும் குளிருக்கான மதுவுடனும் அவர்களின் வாழ்வோடு இசைந்து செல்வதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர்.
நுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் காட்சிகளை சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதை அற்புதமாக செய்திருக்கிறார் இயக்குநர் Quanan Wang



இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் மீதும் அந்த பாலைவனத்திலும் ஒளிப்பதிவு அருமை. நம்மை படத்துடன் இயைந்து அழைத்து செல்கிறார் இயக்குநர்.

தூயாவாக நடிக்கும் Nan Yu மிகச்சிறந்த சீன நடிகை. மிக துல்லியமான உணர்ச்சிகளை வெளிகாட்டுவதிலும் நம்மை அதிர வைக்கிறார்.
தாயாக அவர் காட்டும் அன்பும் பரிதவிப்பும் அத்தனை இயல்பு.


உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..?? என்ற கேள்வி மனதின் அடிமனதில் ஒரு சுமையாக சித்தரிக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கடைசி காட்சியில் தூயாவின் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்



பெண்ணின் மனதை உணர்த்தும் உமா மகேஸ்வரியின் கவிதை ஒன்று:



எற்றி உடைத்துப் போன
பீங்கான் சிதறல்களைப்
பெருக்கிச் சுத்தப்படுத்துகையில்
கேவலத்தின் நுனியில் நிற்கிறேன்

புறக்கணிப்புகளைத்
தொடுத்துக் கொள்கிறேன்
பூக்களைப்போல மென்மையாக.
முகச்சுழிப்புகளின் கசப்பில்
உப்பும் புளிப்பும் விரவி
உண்ணத்தகுந்ததாகப் பதப்படுத்துகிறேன்.

என் செத்த கோபத்தை மட்டும்
செய்வதறியாது
எறிகிறேன்
கழிவறைக் கோப்பைக்குள் .....



இந்த சீன திரைப்படம் பெர்லின் மற்றும் பல சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்தது. அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.


2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகளை அள்ளியது.


சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.



உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்


டிஸ்கி: சற்றே விரிவான மீள் பதிவு.

Happy Times

















ஜகோ 52 வயதான கட்டை பிரம்மச்சாரி. தொழிற்ச்சாலை மூட்பட்டதால் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டுகிறார். ஆனாலும் பல முறை காதல் முயற்ச்சியில் தோல்வியுற்று இன்னும் தன் கனவுலக தேவதையை தேடி வருகிறார். கையில் காசில்லாத இவரை யார் கல்யாணம் பண்ணுவார்கள். எப்படியாவது பணம் சேர்க்க தனது சீடன் ஒருவனிடம் ஆலோசனை கேட்கிறார்.


அவனும் தொழிற்சாலை பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் பல ஜோடிகள் ஜொள்ளு விட்டு திரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் பல ஆண்டுகளாக ஒடாது பாழைடைந்து கிடக்கும் பேருந்தை புதுப்பித்து காதலர் தங்கும் ஒய்வறையாக {பச்சையாய் சொன்னா பலான அறை} மாற்றி அதற்கு “Happy Times Hotel" என்று பெயரிட்டு நல்ல காசு பார்க்கலாம் என்று ஐடியா கூறுகிறான்.


தன் வயதுக்கு இதெல்லாம் தேவையா என்று நினைத்தாலும் கல்யாண ஆசையால் அரை மனதுடன் சம்மதிக்கிறார். இருவரும் இரவு பகலாக உழைத்ததால் “Happy Times Hotel" ரெடி.....



வெயிட்.... கல்யாண மேட்டருக்கு வருவோம்.



இதுவரை எவரும் சிக்காத நிலையில் மணமுறிவு ஏற்பட்ட 40 வயது இளம் பெண்ணுக்கு மணமகன் தேவை என்று தரகர் ஒருவர் கூறவே ஒரு ரெஸ்டாரண்டில் டேட்டிங் ஏற்பாடாகிறது. ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம் என்பது அகில உலக பழமொழியோ என்னவோ, ஜகோ அந்த உணவு விடுதி தனக்கு சொந்தமாதென்றும் இன்னும் நிறைய சொத்து உள்ளதென்றும் சும்மா அளந்து விடுகிறார். உடனே அவளும் சம்மதிக்கிறாள்.



பட்சி சிக்கிடுச்சுடான்னு சந்தோஷமாக சீடனிடம் சொல்ல அண்ணாமலை போல சைக்கிளில் பறக்கிறார். அவனும் தலைவா,,Happy Times வந்த வேளை... எப்படியாவது செட்டில் ஆயிடனும் சொல்லி வாழ்த்துகிறான்.



டேட்டிங் முடிந்து மீட்டிங். தன் வீட்டுக்கு விருந்து வருமாறு சொல்கிறாள் அவள். பூங்கொத்து ஒன்றை பலத்த பேரம் பேசி வாங்கி கொண்டு
பெண்மணி இருக்கும் வீட்டை கண்டு பிடிக்கிறார். அங்கோ அவளது 10வயது குண்டு மகன் சதா சாப்பிட்டு கொண்டே வீடியோ கேம்ஸ் ஆடி கொண்டு இருக்கிறான்.


மூவரும் சாப்பிட உட்கார்ந்ததும் “அந்த சனியனையும் சாப்பிட கூப்பிடு என்கிறாள் பெண்மணி”.. கைகளே கண்களாய் தட்டு தடுமாறி வந்து அமர்கிறாள் யிங்.


என் கணவனின் முதல் மனைவியின் பார்வையிழந்த பெண் என்றும் இத்தையும் என் தலையில் கட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து விட்டு ஒடிவிட்டான் என்று புலம்புகிறாள். ஆனால் நான் தான் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருவதாய் அவளும் தன் பாட்டுக்கு அளந்து விடுகிறாள். விருந்து முடித்து தன் விடுதி வேலைக்கு திரும்புகிறார் ஜகோ.


அவர் சென்றதும் யிங்கை படாத பாடு படுத்துகிறாள். சமையல் பாத்திரம் அனைத்தையும் கழுவினால் தான் அடுத்த வேளை உணவு என்கிறாள். அத்துடன் உன்னை விரைவில் தலை முழுகினால் தான் எனக்கு நிம்மதி என்று பொரிந்து தள்ளுகிறாள். தன் விதியை நொந்த படியே
பார்வை வற்றி போனாலும் கண்ணீல் நீர் வற்றாது அழுது கொண்டே அத்தனை பாத்திரங்களையும் தேய்த்து முடிக்கிறாள் யிங்.



மறு நாளும் ஜகோ சந்திக்க சென்றதும் இந்த பெண்ணுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தால் மட்டுமே கல்யாண்ம் என்று குண்டை தூக்கி போடுகிறாள் குண்டு பெண்மணி. குழம்பி போய் செய்வதறியாது சீடனிடம் விஷயத்தை சொல்லவே அவனும் சரி.. இட்டுகினு வாங்க ஏதாவது ஏற்பாடு செய்யலாம். குருட்டு பெண் தானே.. இருக்கவே இருக்கு Happy Times Hotel. அதுக்கு இந்த மாதிரி ஆள் தான் தேவைன்னு அவரை சமரசம் செய்கிறான்.



மறு நாள் வந்த வேகத்தோடு யிங்கை அழைத்து கொண்டு செல்கிறார். வரும் வழியில் பேருந்தில் அவள் கண்கள் குளமாக அமர்ந்து வருவதை காண்கிறார். சித்தி செய்யும் கொடுமைகளை போட்டு உடைக்கிறாள் யிங். தான் யாரையும் நம்ப தயாரில்லை என்கிறாள் யங்.



அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உனக்கு கண்டிப்பாக முடிந்த உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்து அவளை மகிழ்ச்சி படுத்த ஐஸ்கீருமும் வாங்கி கொடுக்கிறார் ஜகோ.



தனது அறையில் தங்க வைத்து விட்டு பாழடைந்த தொழிற்சாலையில் போய் படுத்துகிடக்கிறார். மாற்று உடை கூட இல்லாத பெண்ணுக்கு தனது பழைய தொலைகாட்சி பெட்டியை விற்று புதிய உடையும் வாங்கி கொடுக்கிறார்.




மிகுந்த சந்தோஷத்துடன் மறு நாள் மைதானத்திற்கு சென்று பார்த்தால் Happy Times Hotel அம்பேல். முட் செடியும் புதரும் மண்டி கிடப்பதால் நகராட்சி ஊழியர்கள் அனைத்தையும் சுத்தம் செய்ததுடன் பஸ்ஸையும் தூக்கி கொண்டு சென்று விட்டார்கள்.



சீடனும் ஜகோவும் கையில் இருந்த காசையெல்லாம் போட்டு புதுப்பித்த பஸ் பறி போனதை எண்ணி சோகமே உருவாய் செய்வதறியாவது திகைகின்றனர். யிங்கை திருப்ப கொண்டு வந்து விடுதாய் கூற அடியோடு மறுக்கிறாள் பெண்மணி. அவளுக்கு மசாஜ் செய்வது தெறியும். அதை வைத்து மசாஜ் பார்லரில் சேர்த்து விடுமாறு கூறுகிறாள்.



நாட்கள் செல்ல செல்ல பார்வையற்ற யிங் மீது இனம் புரியாத பாசமாகிறார். மனைவியை தேடிய தனக்கு ஒரு மகள் கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறார்.



அவளை மீண்டும் கொடுமை படுத்தும் பெண்மணியிடம் திருப்பியனுப்ப மனமில்லாமல் அவளை சந்தோஷப்படுத்த தொழிற்சாலையிலேயே மசாஜ் போன்று ஒரு இடத்தை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்குகிறார்.


நண்பர்களையே தினசரி கஸ்டமர்கள் போன்று சென்று வர ஏற்பாடு செய்து கையில் உள்ள காசையெல்லாம் டிப்ஸ் போல அளித்தும் வரவே தன்க்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்த்தாகவும் நல்ல வருமானம் வருவதாகவும் மகிழ்கிறாள் யிங்.


ஆனால் ஒரு நாள் தட்டு தடுமாறி செல்லும் போது இந்த இடம் பார்லரா என்று சிறிது சந்தேகமும் கொள்கிறாள். கையில் இருந்த பணமெல்லாம் காலியாகவே டிப்ஸ் அளிக்க பணமில்லாத நிலையில் போலி நோட்டுகளை தயார் செய்து அளிக்கிறார் ஜகோ.


நிறைய டிப்ஸ் சேர்ந்த்தால் இன்றைக்கு நல்ல ஒட்டலில் போய் உணவருந்தாலாம் என்கிறாள் ஜகோ. அய்யோ அந்த பணத்தையெல்லாம் நீ செலவழிக்காதே.. அதை பத்திராமாக சேர்த்து வை என்று சமாளிக்கிறார். யிங்கும் ஆமாம் பணம் முழுவதையும் சேமித்து எனக்கு பார்வை கிடைத்தால் என் தந்தையை தேடி கண்டு பிடிப்பேன் என்கிறாள். அது தவிர பெற்ற தந்தையே புறக்கணித்த என்னை மகளாய் நினைக்கும் உங்களை காண வேண்டும் என்று அன்பாய் கூறவே நெகிழ்ந்து போகிறார் ஜகோ.


தனது தந்தையிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தை கொடுக்கிறாள். அதை தனக்காக படிக்குமாறும் கூறுகிறாள். படித்து முடித்ததும் தன்னை பற்றி ஒரு வரியும் எழுத வில்லையா என்று ஆதங்கமாய் அவள் கேட்கவும் எழுத்துக்கள் சிறியதாய் இருப்பதாய் தெரியவில்லை. நாளை காலை நிதானமாய் படித்து சொல்வதாய் சொல்லி சமாளிக்கிறார் ஜகோ. ஆனால் பொறுப்பில்லாத தக்ப்பன் இந்த பார்வையில்லாத பெண்ணை மற்ந்தே விட்டான் போலும்.



திருமண நாள் குறிக்க பெண்மணியின் வீட்டிற்கு சென்ற ஜகோ மிக்ப்பெரிய பூச்செண்டுடன் ஒருவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அலறி துடிக்கிறார். பெண்மணியிடம் சண்டையிடுகிறார். அவளோ... நீயே அந்த ஒட்டல்ல வேலை பார்க்கிற நாய். உனக்கெல்லாம் கல்யாணமா.?? என்னையே பொய் சொல்லி ஏமாத்தவா பார்க்கிற.. என்று திட்டி ஜகோவை அடித்து விரட்டுகிறார்.



நினைத்து பார்க்க முடியாத ஏமாற்றத்துடனும் மிகுந்த பசியுடனும் ஒரு ஹோட்டலில் சாப்பிட போகிறார். ஒரு பேப்பரை எடுத்து என்னவோ எழுதியும் தள்ளுகிறார். சாப்பிட கூட பிடிக்காமல் வாழ்க்கையே வெறுத்து போய் ஒரு Full வாங்கி கொண்டு ரோட்டோரமாய் உட்கார்ந்து கொண்டு பெண்மணியை கண்டபடி திட்டியபடியே புலம்பி தீர்க்கிறார்.




இரவும் நேரமாகி பாட்டிலும் காலியாகி விடவே தட்டு தடுமாறி ரோட்டில் நடந்து செல்லும் போது வேகமாக வந்த டிரக் ஜகோ மீது மோத தலையில் பலத்த அடி பட்டு வீழ்ந்து கிடக்கிறார். ஆள் அரவம்ற்ற சாலையில் பயந்து போன டிரைவர் முதலில் ஒடி விட நினைத்து பின்னர் மனிதாபிமானத்துடன் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கிறான்.




தகவல் அறிந்து நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு ஒடி வருகின்றனர். மருத்துவரும் நிலைமை பரவாயில்லை. அவரது மகளுக்கு முதலில் தகவல் தெரிவியுங்கள் என்கிறார்.



மகளா.. ?? அவருக்கு திருமணமே ஆகவில்லை என்கின்றனர் நண்பர்கள். அவர் மகள் யிங்கிற்கு எழுதிய கடிதம் அவர் சட்டை பையில் எப்படி வந்தது என்று கேட்கிறார் மருத்துவர். அவளை முதலில் அழைத்து வாருங்கள் என்றும் கூறுகிறார்.



நிலைமையை புரிந்து கொண்ட நண்பர்கள் யிங்கை அழைத்து வர ஜகோவின் அறைக்கு விரைகின்றனர். ஆனால் அங்கோ அதிர்ச்சியாய் அவள் இல்லை.



தான் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிக மிக சந்தோஷமான நாட்களாய் ஜகோவிடம் இருந்த நாட்களே என்றும் அவருக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த கடைமை பட்டவளாய் இருப்பேன் என்றும் அவளை மகிழ்விக்கவும் அவளுக்கு மன உறுதியளிக்கவும் அவ்ர்கள் செய்த தந்திரங்கள் அனைத்தும் தனக்கு தெரியுமென்றும் தெரிந்தே அவளும் முழு மனதுடன் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவித்த்தாக கூறி ஒரு டேப் ரிகார்டரில் தனது நன்றியை பதிந்து வைத்து விட்டு எங்கோ சென்று விட்டாள் யிங்...



கையில் இருந்த மகளுக்கான லெட்டரில் ஜ்கோ, அருமை மகளுக்காக தான் பணம் சேமித்து வருவதாயும் விரைவில் அவள் கண்பார்வை அடைய அனைத்து ஏற்பாடுகளையும் செயவதாயும் அதுவரை மன உறுதியுடன் இருக்குமாறு எழுதி இருப்பதை படித்து சிலையாய் நிற்கின்றனர் நண்பர்கள்....


நகைச்சுவையுடன் ஆரம்பித்து நெகிழ்வாய் முடிகிறது திரைப்படம்.



Yan Mo என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 2000ம் ஆண்டில் வெளியானதுடன் பல பரிசுகளை வென்றது.



இயக்கம் Yimou Zhang. மிகச்சிறந்த சீன இயக்குநர். பார்வையற்ற பெண்ணாக நடித்த Jie Dong சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்று தந்த திரைப்படம்.



விவரிக்க முடியாத தனித்துவமான வசீகரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது இந்த திரைப்ப்டம். நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது. கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டும்படியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். அப்படி ஒரு அலாதி நிகழ்வுகளை அமைதியாக அதே சமய்த்தில் அழுத்தமாக சொன்ன Yimou Zhang இயக்குநரை பாராட்ட வார்த்தைகளில்லை.


சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Plz Don't Miss it.....

Or My Treasure











==================================================================
நூறு நிமிடம் மட்டுமே ஒடும் இத்திரைப்ப்டத்தின் ஆழமும், பார்த்த பின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது.


ஒரு சாதாரண கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? கனத்த இதயத்துடன் சரியாக உறங்க முடியாமல் தவித்த நாளாகி போனது.


=================================================================


ருத்தி 40 சுமார் வயதுள்ள தாய். அவளின் ஒரே செல்ல மகள். Or (அவ பெயரே அதுதான் ) 18வயது இளநங்கை.


ருத்தி கடந்த இருபது வருடமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டே தன் பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறாள். பதின்ம வயதை அடைந்ததும் ஒரளவு உலகம் புரிந்ததும் தாயின் தொழிலை அடியோடு வெறுக்கிறாள் ஒர்.


தாயின் உடல் நிலை மோசமடைவதை கொண்டு அவளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறாள். காலையில் படிப்பும் மதியம் ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலையும் பார்க்கிறாள். அப்போதும் வருமானம் போதவில்லை. இரவெல்லாம் கண் விழித்து தெருவோரங்களில் கிடக்கும் காலி பாட்டில்களை பொறுக்கி அதையும் வாங்கும் கிடங்குகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். கொஞ்சம் வருமானம் கிடைக்கிறது. இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணம் ஒரளவுக்கே இருக்கிறது.



எனவே தாய்க்கு எப்படியாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறாள். தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைக்கிறாள். தாயின் “தொழில்” தெரிந்து எவரும் உதவ முன் வரவில்லை.


பள்ளி ஆசிரியை ஒருவர் உதவ முற்பட்டு “எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை” உங்கம்மாவை போக சொல்றியா” என ஆசிரியை கேட்க மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் வந்து சொல்கிறாள்.

அம்மாவோ ‘எவ்வளவு சம்பளம் என்று கேட்க .. மாதம் இரண்டாயிரம் என்கிறாள் ஒர். அதை ஒரு நாள்ல சம்பாதிச்சுடுவேன் என்கிறாள். அந்த ஈனமான தொழில் வேண்டாம் என்கிறாள் ஒர்.


ஒரு வழியாக அம்மாவை சம்மதிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறாள். அங்கு போனால் மானாவாரியாக வீட்டு வேலையுடன் நாய்க்கு வேளா வேளைக்கு உணவிடுவதுதான் முக்கியமான வேலை என்கிறாள் எஜமானி. ருத்திக்கோ இதெல்லாம் முன்பின் செய்து பழக்கமில்லை. மகள் கோவிப்பாளே என்று பொறுத்து கொண்டு சில நாள் வேலை பார்க்கிறாள்.



விடாது துரத்தும் பண கஷ்டத்தாலும் “தொழிலை” விட முடியாத நிர்பந்ததாலும் அன்று இரவு ஒர் தூங்கியதும் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். ‘இரவு ராணி”க்காக காத்திருந்த பலருக்கு விருந்தாகிறாள். கொஞ்சம் பணமும் கிடைக்கிறது. மறுநாள் இதனையறிந்து ஒர் கடும் கோவம் கொள்கிறாள். அம்மாவை வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டும் சென்று விடுகிறாள்.

இது போன்று இரவுகள் தொடரவே வீதிக்கு வந்து தாயை தடுக்கிறாள் ஒர். மகளுக்காக தன்னை மீண்டும் வருத்தி கொள்கிறாள் ருத்தி.


தான் வேலை செய்யும் ஒட்டல் முதலாளியின் மகனுடன் ஒர் நெருங்கி பழகுகிறாள். அவனும் ஒர் படும் கஷ்டத்தால் அவளுக்கு பல விதத்தில் உதவுகிறான். இதையறிந்த அந்த பையனின் தாய் ருத்தியிடம் முறையிடுகிறாள். ‘உங்க பெண்ணை கொஞ்சம் அடக்கி வைங்க”. அவளை விட ஆறு மாதம் சிறியவன் அவன். ‘இதெல்லாம் ஒத்து வராது என்கிறாள். மகளிடம் அன்பாக பேசி புரியவைக்கிறாள். ஒர் அந்த பையனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறாள்.




ருத்தி தொழிலை விட்டு விட போவதாக ’கஸ்டமர்களிடம் கூற அவர்களுக்கு ‘கஷ்டமாய் போகிறது. விடாது துரத்தி வீட்டுக்கே வந்து விடுகிறான் ஒருவன். மகள் படும் அவஸ்தைகளை நினைத்து மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறாள் ருத்தி.



வெகு நேரம் வேலை செய்வதாலும் பல நேரம் தனியே சுற்றி திரிவதாலும் அவளை குறி வைத்து சுற்றி திரிகிறார்கள் ‘ரோட் சைடு ரோமியோக்கள்”. அவர்கள் வலையில் சிக்காமல் வீடு வந்து சேருகிறாள் ஒர்.



பண கஷ்டமும் அம்மாவின் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்வதறியாது நொந்து போகிறாள் ஒர். வீட்டுக்கார கிழவன் தொடரும் வாடகை பாக்கிக்காக ஒரை ஒரு நாள் வாடகைக்கு கேட்கிறான். முதலில் முடியாது என மறுத்த ஒர், வேறு வழி தெரியாமலும் தொடரும் பண பிரச்சனையாலும் சில மணி நேரம் என மட்டும் என்று சம்மதிக்கிறாள்.



தோழி ஒருத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறாள். முதலில் வந்த இடம் எது என்று தெரியாமல் முழிக்க பிறகு தன் நிலையையும் தாயின் நிலைமையும் மட்டுமல்ல, இந்த சமூகத்தையும் முழுவதையும் புரிந்து கொண்டவளாயும் அந்த பதின்ம வயது பெண் தன் ‘வாடிக்கையாள’ னுக்காக கட்டிலில் காத்திருக்கிறாள்.



இத்துடன் நிறைவடைகிறது திரைப்படம்.



தாய்க்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்துடன் வறுமைச் சூழலில் நிலவும் இருவருக்குள் ஏற்படும் மன அழுத்தங்களையும் சமூக அவலங்களையும், ஆணாதிக்க வக்கிரங்களையும் மனதை அதிர வைக்கும் கொடுமையான காட்சிகளுடன் சித்தரிக்கும் திரைப்படம். சில காட்சிகளை எழுத முடியாமல் மனம் அஞ்சுகிறது...



விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எந்த வித கோட்பாடுகளையும் உடைத்து தூர எறிந்து விடும் என்பதற்கு இத்திரைப்படம் சான்று. இயக்கம் Keren Yedaya. இவரும் ஒரு பெண்மணியே. இது இவரது முதல் திரைப்பட இயக்கம் என்று நம்ப முடியவில்லை.



ருத்தியாக நடித்திருப்பது Ronit Elkabetz . இஸ்ரேல் நாடக நடிகையாக துவங்கி பின் திரைப்பட நடிகையானவர். பல விதப்பட்ட பாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். 1994 ல் இஸ்ரேல் திரைப்பட அகாடமியின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றவர். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.




மகள் ஒர் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பது Dana Ivgy. இவரின் தந்தை இஸ்ரேலின் மிகச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட நடிகருள் ஒருவரான Moshe Ivgy. Dana முறைப்படி நடிப்பு பயிற்ச்சி பெற்றதுடன் சிறு வயது முதலே பல இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



2004 ல் வெளிவந்து பல உலக விழா திரைவிழாக்களில் பங்கு பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசை அள்ளியதுடன் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிய திரைப்படம்.


நிச்சயம் பார்க்க வேண்டிய படமா..??? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்...

The Wind Will Carry Us











மரணத்துக்குப் பின் எங்கு செல்வீர் என்றா கேட்கிறீர்?
முதலில் மது கொண்டு வா! (பிறகு)
எங்கு விருப்பமோ அங்கு போ!
- உமர் கையாம்

"Observing nature is better than playing backgammon or doing nothing,"


இத்திரைப்படத்தில் ஏதோ பெரிய கதை இருப்பதாக தெரியவில்லை. வாழ்வின் சிறிய சிறிய நிகழ்வுகளும் அதை சொல்லியிருக்கும் விதமே அழகுதான்.
The Wind Will Carry us கவித்துவமான இந்த பெயர் Forough Farrokhzad என்ற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் பெயர். அதை தலைப்பிட்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி. செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கம்யூட்டர் யூகங்களின் கரிய நிழல் படாத அழகிய கிராமங்களின் கதை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வாழ்வின் நிகழ்வுகளும் மனித தன்மை இன்னும் உயிரோடு இருப்பதை அழகாக சொல்லியிருக்கும் ஒர் அற்புத படைப்பு.



ஒருவரின் மரணத்திற்கு பிறகு செய்யப்படும் ஈமச்சடங்குகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் புகைப்படமும் ஆவணப்படம் எடுப்பதற்காக டெஹ்ரானின் தொலை தூர கிராமத்திற்கு வருகிறார் பெஸாட்டும் அவரது இரு உதவியாளர்களும். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு முதிர்ந்த மூதாட்டியின் இறப்புக்காக காத்திருக்கிறார்கள்.


அவர்களுக்கு உதவுவதற்காக பணிக்கப்பட்டவன் ஒரு சிறுவன் மட்டுமே. அவன் துணையோடு கிராமங்களை சுற்றி வருகிறார் பெஸாட்.




அவர் சந்திக்கும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வித்தியசமானவர்கள். தினசரி உணவுக்காக மாட்டு பாலை அவருக்கு அளிக்கும் பதின்ம வயது பெண். தான் மட்டுமே தனித்து வேலை செய்து கிணறு தோண்டும் வாலிபன். அந்த பதின்ம வயது பெண்ணின் காதலன். அங்கு டீ கடை நடத்தும் ஒரு பெண்மணி. அவளோடு எல்லாவற்றிற்க்கும் தினசரி வாக்குவாதம் செய்யும் கணவன். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்து குழந்தைகளுக்கு தாயான பெண்மணி, என யதார்த்த கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகள், கலப்படமில்லாத அன்பு, கிராமத்திற்கே உண்டான கிண்டல், நையாண்டி என படம் முழுக்க சின்ன சின்ன நிகழ்வுகள்.



தொலை தொடர்பு சிறிதும் இல்லாத அந்த கிராமத்தில் செல்போன் பேச மலை மேடுகளுக்கு அருகே சென்றால்தான் பேச முடியும். ஒவ்வொரு முறை தனக்கு அழைப்பு வரும் போதும் பெஸாட் ஜீப்பை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு ஒடுவதும் பேசி முடித்ததும் இருப்பிடத்திற்கு வருவதும் வழியில் காணும் கிராம மக்களிடம் உரையாடுவது நல்ல நகைச்சுவை.



தனியாக கிணறு தோண்டும் வாலிபன் மண் சரிவு ஏற்பட்டு உயிருக்கு போராடும் போது எதேச்சையாக அங்கு வரும் பெஸாட் அவனை காப்பாற்ற முயலுகிறார். கண்ணில் காணும் ஊர் மக்கள் அனைவரிடமும் விபரம் தெரிவிக்கிறார். அவர்களும் ஒரு மருத்துவரை அழைத்து வருகின்றனர்.



ஊர் மக்கள் அனைவருக்கும் சேவை செய்யும் மருத்துவர் வாலிபனையும் காப்பாற்றுகிறார். இறப்புக்காக கடைசி காத்திருந்த பெண்மணி கடைசிவரை இறக்கவேயில்லை. ஆவணப்படம் பிடிக்க முடியாத ஏமாற்றம் இருந்தாலும் சில புகைப்படங்களை எடுத்து கொண்டு கிராம மக்களையும் அவர்களின் அன்பையும் வாழ்க்கை முறையையும் அறிந்த பெஸாட் ஊர் திரும்ப்புகிறார் என்றே நாம் முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.



படம் முழுவதும் ஆங்காங்கே கிராமத்தார் பாடும் பாடல் போன்ற கவிதை வரிகளும் அருமை. மலை பிரதேடங்களிலும் பசுமை நிற்ந்த வயல் வெளிகளிலும் மனதிற்கு ரம்மியமான சூழல்களிலும் மலை மீதுள்ள வீடுகளிலும் எடுக்கப்பட்ட காட்சியமைப்பு அற்புதம்.



" Prefer the Present" என்று தொலை தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மருத்துவர் முணுமுணுப்பதாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.



1999 ல் வெளியாகி பல சிகாகோ, வெனீஸ் திரைப்பட விருதுகளை அள்ளியது. பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது தனிச்சிறப்பு.


சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம பாருங்கள்.


உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்.


முக்கியமான டிஸ்கி: பின்னூட்டத்தில் காண்க.

Daddy Day Care














"The smallest children are nearest to God, as the smallest planets are nearest the sun" -- Jean Paul Richter

சார்லி ஒரு பொறுப்பான குடும்ப தலைவன். மனைவி கிம் வக்கீல், நாலு வயது மகன் பென் படு சுட்டி. சந்தோஷமாக வாழ்க்கை.



இப்படியாக போய் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத நேரத்தில் சார்லி வேலை செய்யும் நிறுவனம், அவன் வேலை பார்க்கும் டிவிஷனையே மூட முடிவெடுக்க சார்லிக்கு வேலை காலி.



அதே சமயத்தில் அன்று தான் மகனை கிம்மை Play school ல் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்கிறான். அதை நடத்துபவர் ஹாரிடான் என்ற பெண்மணி. குழந்தைகளுக்கு ராணுவம் போன்று பயிற்ச்சியளித்தால் தான் அவர்கள் பொறுப்பான குடிமகன்களாக வருவார்கள் என்ற எண்ணம் கொண்டவள். அந்த பள்ளியில் கட்டணமும் எக்கசக்கம்.



வேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.



பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி வரும் நேரத்தில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை வைத்து கொண்டு படும் பாட்டை எண்ணி தானே நண்பர்கள் பில் மற்றும் மார்ட்டினுடன் சேர்ந்து Play school தொடங்கினால் என்ன என்ற விபரீத ஆசை வரவே, தொடக்கமாகிறது Daddy Day Care.



குழந்தைகளை பராமரிக்க அவர்கள் படும் கஷ்டமும் குழந்தைகள் அடிக்கும் லூட்டியும் தான் இந்த திரைப்படம்.



100 % பொழுது போக்குடன் கூடிய அமெரிக்க முழு நீள காமெடி திரைப்படம்



முதலில் வீட்டிலேயே தொடங்க முடிவெடுத்து ஒரு சுப யோக நன்னாளில் படு அமர்களமாக தொடங்கப்படுகிறது. ஆனால் யாரும் ஆண்கள் பராமரிக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முன் வருவதில்லை. ஒரு நாள் இலவச சலுகை என விளம்பரம் செய்யவே, சிறிது சூடு பிடிக்கிறது.



ஹாரிடான் நடத்தும் பள்ளியை விட மிக குறைந்த கட்டணமும் வசூலிக்கவே சிறிது சிறிதாக குழந்தைகளை சேர்க்கின்றனர் பெற்றோர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இவர்களை படுத்தி எடுக்கிறது.



பொறுமையுடனும் பெற்றொருக்குரிய அன்புடனுமே பராமரிக்க குழந்தைகள் சந்தோஷமாக வந்து குவிகின்றனர். குழந்தைகளை மகிழ்விக்க சார்லியும் அவனது நண்பர்களும் செய்யும் சேஷ்டைகளும் ஆடல் பாடலும் திரைப்படம் பார்க்கும் நம்மையும் மகிழ வைக்கும்.



ஹார்டான் கடுப்பாகி அரசாங்க அதிகாரியை அனுப்பி பல விதத்தில் தொல்லை கொடுக்கிறாள். அதையும் சமாளித்து செல்கின்றனர் மூவரும்.


இறுதியில் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வீட்டில் நடத்த கூடாதென்றும் தனியாக இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென்றி கூறி செல்கிறார் அதிகாரி.


அதற்க்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பணம் சேர்க்க முயலுவே அதிலும் புகுந்து கெடுக்க நினைக்கிறாள் ஹார்டான்.

திடீரென கம்பெனியில் வேலையில் மீண்டும் சேர சார்லிக்கு அழைப்பு வரவே அரை மனதுடன் நண்பருடன் வேலையில் சேருகிறான் சார்லி.


மீண்டும் வேலையில் சேர்ந்த முதல் நாள் மனிதன் ஒவ்வொருவருக்கும் சந்தோஷமானவை எது என்று கேட்கவே சார்லி என் குழந்தையே என்று சொல்லி அன்றே வேலையை விட்டு விட்டு புது இடத்தில் மீண்டும் தனது Daddy Day Care பள்ளியை பெரிய அளவில் மிகுந்த உற்சாகத்தோடு ஆரம்பிக்க அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.


குழந்தைகள் சார்லி திரும்பி வந்த்தை பார்த்து குதித்து கும்மாளமிட திரைப்படம் இனிதே முடிகிறது.



எடிமர்பியின் துள்ளலான நடிப்பும் குழந்தைகளின் லூட்டியும் படு சூப்பர்.



2003 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இயக்கம்: Steve Carr


குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் சந்தோஷமாக பார்க்க வேண்டிய அருமையான நகைச்சுவை திரைப்படம்.


இதன் இரண்டாம் பாகமும் Daddy Day Camp என்று 2007 ல் வெளியானது.


சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.


உடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்


டிஸ்கி: திரைப்படம் முடிந்ததும் டிவிடியில் behind the scenes காண தவறாதீர்கள்.

Kikujiro























தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை... உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.



நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.



அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்ச்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.



சோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார், தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.


மனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.


மாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.



வேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.



ஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.


இந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். நிகழ்வுகளின் கோர்வையே நூறு சதவித சுவாரசியங்களுக்கு நான் கிராண்டி.



நீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.


உண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.


மீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.


வரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான
டகேஷி கிட்டானோ.



குழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.



ஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.

இறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.

ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..


தீவிர சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் கிகுஜிரோ.

உடனே பார்க்க டிரைலர்

1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம்.

நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:

காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,

மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்

தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த ஆளில்லாத போதும்,

நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை.......



என்று அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் எளிய கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.


இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் தேவையோ இல்லையோ குடும்ப வ்ருமானம் கருதியும் மிகைப்படுத்தப்ட்ட வாழ்க்கை முறை வேண்டி நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனிமையில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த மாசோவை நினைவு படுத்துகின்றனர்.




Autumn








1990 களில் கல்லூரி நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக பத்தாண்டு சிறை வாசம் பெறுகிறான் யூசூப். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உடல் நிலையின் பொருட்டு விடுதலையாகிறான்.



சிறையில் இருக்கும் போது தந்தையும் இறந்து விடவே, தன்னையே எண்ணி வாடி இருக்கும் தாயுடன் வந்து சேருகிறான். விடுதலையாகி வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் யூசுப்பை சந்தித்து பல அறிவுரைகளை வழங்குகின்றனர். பல வித வேலைக்கும் சிபாரிசு செய்கின்றனர். தாயின் உடல் நலம் கருதி எங்கும் செல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை.



தனது ஒரே நண்பனான மிக்காயிலின் தச்சு பட்டறையில் அவனுக்கு உதவியாய் சில வேலைகளை மட்டும் செய்து சிறிது பணம் சம்பாதிக்கிறான். இருவரும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்வதும் மலையூச்சிக்கு சென்று இரவுகளை கொண்டாடுவதுமாக பொழுதை கழிக்கிறான்.



கல்லூரி நாட்களில் கணிதத்தில் அதிக ஆர்வமுள்ளவனாய் இருந்ததால் உறவுக்கார சிறுவன் ஒருவனுக்கு கணித பாடங்களை சொல்லி தருகிறான். அவனும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவனுக்கு சைக்கிள் பரிசளிப்பதாகவும் உறுதியளிக்கிறான்.



எதிலும் பற்றவனாக திரிந்து வரும் வேளையில் புத்தக கடையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் இகாவை சந்திக்கிறான். அவள் ஜார்ஜியாவிலிருந்து பிழைப்பு தேடி வந்து எந்த வேலையும் கிடைக்காமல் விலை மாதுவாகிவிடுகிறாள். தன் ஒரே நான்கு வயது பெண்ணுக்காக அந்த தொழிலை செய்து பணம் ஈட்டுகிறாள்.


சிறைவாசத்தின் கொடுமைகளையும் அவன் அனுபவித்த வேதனைகளையும் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். பல இரவுகள் தூக்கமின்றி அலறி எழும் காட்சி திரைப்படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.


இகாவின் நிலையை எண்ணி வருத்தம் கொள்கிறான் யூசுப். இருவரும் நெருங்கி பழகுகின்றனர். என்னதான் மனங்கள் நெருங்கினாலும் வெவ்வேறு தேசத்தவரானதால் இகாவால் துருக்கியில் தங்க முடியவில்லை. அவளின் விசா இன்னும் 15 நாட்களேயுள்ளது. சொல்ல முடியாத வேதனையுடன் யூசுப்பை தன் நாட்டுக்கு வந்து விடுமாறும் அங்கு சென்று இனிமையான வாழ்க்கை வாழ வேண்டுகிறாள். ஆனால் தனக்காக பத்து வருடங்களாக அத்தனை துயரங்களையும் தாங்கி கொண்டு வயது முதிர்ந்த தாயை விட்டு வர முடியாமல் தவிக்கிறான்.



இகாவின் விசா பூர்த்தியாகும் நாளும் நெருங்குகிறது.


அன்று புதிய சைக்கிளுடன் வீடு வந்து சேருகிறான் யூசூப். சிறு வயதில் அவன் ஆசையுடன் வாசிக்கும் பேக்பைப்பர் இசை கருவியை எடுத்து வாசிக்குமாறு தாய் யூசுப்பை வேண்டவே கனவு காண்பது வேண்டுமானால் நமது ஆசையாய் இருக்கலாம் ஆனால் இறைவன் அருளிலிருந்தால் மட்டுமே விரும்பியது கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்று கொள்வதே சிறந்தது என்ற பாடலை இசைப்பதாக படம் நிறைவடைகிறது.



இந்த துருக்கி திரைப்படம் மிககுறைவான பாத்திரங்களை கொண்டு படைக்கப்பட்ட அற்புத படைப்பு கண்கள் வியக்கும் ஒளிப்பதிவும் இழையோடி வரும் அற்புத இசையும் கூடுதல் சிறப்பு.



வட துருக்கியின் மலைப்பிரேதசங்களையும் ஒளிப்பதிவான காட்சிகளை விவரிக்க வார்த்தைகளில்லை. கருங்கடலின் சீற்றம் யூசூப் இகாவின் மனதின் ஏற்படும் உள்ள குமுறலாய் குறீயீடாய் சித்தரித்திருப்பது அத்தனை அழகு.


சென்ற ஆண்டு {2008} வெளியாகி விருதுகளை வாரி குவித்துள்ளது.
  • Adana Golden Boll Film Festival, Turkey (2008): Best Film, Best Supporting Female Actor (Megi Kobaladze),


  • Special Jury Prize Locarno Film Festival, Switzerland (2008): The Art and Essay Cicae Prize


  • SIYAD (Turkish Film Critics’ Association) Awards, Turkey: Best Film, Best Script, Best Director, Best Cinematography (Feza Çaldıran), Best Actor (Onur Saylak)


  • Eurasia Film Festival, Antalya, Turkey (2008): Netpac Jury Award


  • Tiblisi Film Festival, Georgia (2008): Silver Prometheus Award


  • Premiers Plans Angers European First Film Festival, France (2008): Soundtrack Award


  • Festival on Wheels, Turkey (2008): Silver Goose and Critics’ Awards


  • Montreal World Film Festival, Canada (2008)


The Winning Team



திரைக்கதை இயக்கம் Ozcan Alper. இஸ்தான்புல் பல்கலைகழகத்தில் வரலாறும் அறிவியலும் பயின்ற இவர் மாற்று சினிமா மீதுள்ள அதீத ஆசையால் சினிமா தொழில் நுட்பம் பயின்றார். பின்னர் சிறு தொலைகாட்சி சீரியல்களை இயக்கினார். இவரது முதல் குறும்படம் Momi (Grandmother) இவரது சொந்த மண்ணின் மொழியான ஹெம்சின் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் படம். இவையெல்லாவற்றையும் விட தனி சிறப்பு இது இவரது முதல் திரைப்படம்.

கிம் கிடக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring போலவே இயற்கையின் பருவங்களை ஒளிப்பதிவின் மூலமும் குறீயீடுகள் மூலமும் கதை சொல்லியிருக்கிறார் என்று பாராட்டுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் ஸ்கீரின் டெய்லி பத்திரிகை. Autumn பருவ காலத்தை இதில் அழகாக சொல்லிவிட்டார் என்றும் இந்த இளம் இயக்குநருக்கு மகுடம் சூட்டுகிறது.

ஒளிப்பதிவு Feza Çaldiran. இவரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பதை டிரைலர் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.



சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.



டிரைலரை உடனே பாருங்கள்.


டிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.





 

©2009 வண்ணத்துபூச்சியார் | by TNB