
சினிமா என்றாலே நாலு பாட்டு ஐஞ்சு ஃபைட்டு என்று நம்பிக்கொண்டிருக்கிறான் தமிழ் ரசிகன். விஜய், அஜித், நமீதா, நயன்தாரா தாண்டி அவன் சிந்திப்பதே இல்லை.
ஆனால், இதையெல்லாம் தாண்டி உலக சினிமா என்கிற ஒன்று இருக்கிறது. அது என்ன உலக சினிமா..? ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், (அப்படி சொன்னால் நம்ம கமலுக்கு கோவம் வரும். வேறு என்ன சொல்ல..?) ஏன் டோலிவுட் கூட இருக்கிறது. ஆனால், எந்தத் திரைப்படமும் உலக தரம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு எடுக்கப்படுவதில்லை.
திரைப்படம் உருவாக்கும் கதைகள், சூழல், பாத்திரங்கள், நடிப்பு முதலியவற்றால் மட்டுமே அது உலகத் தரத்தை அடைகிறது. சுருங்கச சொன்னால், உலக மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கும்படியும் பாராட்டும்படியும் அமைந்தால் அது உலக சினிமா ஆகிறது.
உலக சினிமாவில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் பிரபலமானது ஈரானிய திரைப்படங்கள்தான். கடுமையான தணிக்கை முறைக்கு பிறகு வெளிவரும் சூழலில், இது எப்படி சாத்தியமாகிறது?
வாழ்வை மிக நெருக்கமாக காட்டுவதாலும் அதன் அசல் (அஜித்தின் அசல் அல்ல) தன்மையோடு பேசுவதாலும், ஹீரோ வில்லன் என்கிற எத்தகைய லோக்கல் பார்முலாக்களும் இல்லாது காதல், நேசம், அன்பு, பாசம் அனைத்தையம் யாதார்த்தமாக சித்தரிப்பதால் இது சாத்தியப்படுகிறது. அது மட்டுமல்லாது பாரசீக மஸ்னவி, கஜல் போன்ற இசை மரபின் வழமையிலும் திரைப்படங்கள் வெளியாகி ஒரு கவிதையாய் மலர்ந்து மகிழ்ச்சியூட்டுகின்றன.
அப்படி உலகத் தரத்தில் தனது படைப்புகளை அளிப்பவர்தான் ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. 1959, ஏப்ரல் 17-ல் இரானில் பிறந்து வறுமையில் வாடியவர். 12 வயதில் தெருதெருவாக இனிப்பு மற்றும் ஜஸ் விற்றும் பள்ளிப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் பிறகு டெஹ்ரானில் உள்ள நாடக கல்லூரியில் சேர்ந்தார்.
1978,- 79-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். என்றாலும் இயக்குநராக வேண்டும் என்பதே இவரது பேரார்வமாக இருந்தது.
1992-ல் தனது முதல் திரைப்படமான Badak-ஐ திரைக்கதை எழுதி இயக்கினார்.

1996-ல் வெளிவந்தது Pedar(Father). நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்துவிட்ட தங்களின் உறவுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதைதான் இந்தத் திரைப்படம்.
'Children of Heaven' பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.

1999-ல் வெளிவந்த The Colour of Paradise திரைப்படம், அப்பாவின் இரண்டாவது திருமண ஆசையால் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற சிறுவன் மொஹமதுவைப் பற்றியது. இந்தப் படத்தில் மகன் கண் பார்வையில்லாதது ஒரு ஊனமென்றால், தந்தையும் மன ஊனம் கொண்டவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர். இதுவும் பல விருதுகளை பெற்றது. அந்த ஆண்டு வெளிவந்த பத்துத் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாக டைம் பத்திரிகை இப்படத்தை தேர்வு செய்திருந்தது.

Baran (Rain) என்கிற படம் 2001-ம் ஆண்டு வெளியானது. இது பதின்ம வயதில் இருக்கும் லத்தீப் என்கிற இளைஞனின் கதை. அகதியாக இருக்கும் குடும்பதிலிருந்து வறுமை காரணமாக ஆண் வேடமிட்டு வரும் பாரன் என்ற பெண்ணை சந்திக்கிறான். அவனுடைய காதல், மழைபோல அந்த வாலிபனின் மனதில் பெய்துவிட்டு செல்வதாக அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித் மஜிதி. அந்த இளம் பெண்ணின் முகத்தை திரைப்படம் முடியும்வரை காட்டாமல் அவள் விட்டுச் சென்ற காலடிச் சுவட்டை மழை நனைப்பதோடு படம் நிறைவடைகிறது. ஸ்கீரின் சர்வதேச விருதுடன் 13 உலக விருதுகளை வென்றது இப்படம்.

The Willow Tree (2005) ஒரு கண் பார்வையற்ற பேராசிரியர் யூசுப். மற்ற எல்லோரையும்போல தனக்கும் கண் பார்வை வேண்டும். இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும். தனக்கு பிரியமான மனிதர்களை நோக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எழுகிறது. ஆனால், பார்வை கிடைத்ததும் அவர் அடையும் மன வேதனைகளையும் ஏமாற்றத்தையும் சித்தரிக்கும் அதி உன்னதமான திரைப்படம் வில்லோ ட்ரீ. டோரண்டோ திரைப்படவிழாவில் விருது பெற்றதுடன் பல உலக விருதுகளை அள்ளியது.

Song of Sparrows (2008) தெஹ்ரைனிலுள்ள தீக்கோழி பண்ணையில் பணிபுரிகிறான் கறீம். வறுமையான குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளை பாதுகாக்க அவன் படும் அல்லல்கள், தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று புரிய வைக்கிறது இப்படம். இதில் தந்தையின் அன்பு, பாசம், பிரியம் ஆகியவற்றை அற்புதமாகக் காட்டியிருப்பார் மஜித். பெர்லின் திரைப்படவிழா விருதுடன் இப்படமும் பல விருதுகளை அள்ளியது.
இவை தவிர எண்ணற்ற குறும்படங்களையும் ஆவணபடங்களையும் எடுத்துள்ளார் மஜித் மஜிதி.
2008ல் நடந்த சீன ஒலிம்பிக்ஸ்ஸில் பெய்ஜிங் பற்றிய குறும்படம் தயாரிப்பதற்காக சீன அரசாங்கம் இவருடன் சேர்த்து 5 மிகச்சிறந்த இயக்குநர்களை தேர்வு செய்தது.உலகத்தின் பல விருதுகளை பெற்றதுடன் சென்ற வருடம் Starz Denver சர்வதேச திரைப்படவிழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவரது கலைப்பயணம் தொடர்கிறது.
உலகின் எல்லா இயக்குநர்களுக்கும் எது பிரச்சினையோ, அதுதான் இவருக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா என்று எவருக்கும் தெரியாது. ஒரு தயாரிப்பாளனை திருப்திபடுத்துவதான் முதல் வேலை என்கிறார் மஜித். இருந்தாலும், பல திரைப்படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்காரவும் விசிலடிக்கவும் வைக்கிறது. ஆனால், தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும்.
ஒரு நல்ல படம் வாழ்க்கையில் நெருக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்க வேணடுமே தவிர பார்வையாளனை ஒரு பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கக் கூடாது. வாழ்வின் உண்மையைக் கண்டடையும் பயணமாக அது தொடங்கவேண்டும். ஒரு திரைப்படம் என்பது கலையாக, அன்பாக, நேசமாக, காதலாக யதார்தத்தின் ஒரு பதிவாக வெளிப்பட்டால் மட்டுமே அது உலக சினிமாவாக போற்றப்படுகிறது.
டிஸ்கி: சூரிய கதிர் (ஜன 16-31) இதழில் வெளியான கட்டுரை.
Posted by
butterfly Surya